மும்பை: ஐபிஎல் தொடரின் மெகா ஏலம் நடக்கவுள்ள நிலையில், பிசிசிஐ தரப்பில் புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு அணியும் 6 வீரர்களை ரீடெய்ன் செய்து கொள்ள முடியும். அப்படி ஒருவேளை எந்த வீரரையும் தக்க வைக்கவில்லை என்றால், மெகா ஏலத்தில் 6 ஆர்டிஎம் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரைட் டூ மேட்ச் (ஆர்டிஎம்) வாய்ப்பு என்பது ஒரு வீரரை வாங்குவதற்கு ஏலம் நடக்கும் போது, அதிக தொகை கொடுக்க முன்வரும் அணிக்கு அந்த வீரர் ஒப்பந்தம் செய்யப்படுவார். ஆனால் ஏற்கனவே அந்த வீரர் விளையாடும் அணியே வாங்க விரும்பினால், ரைட் டூ மேட்ச் என்ற வாய்ப்பை பயன்படுத்தி, ஏலம் சென்ற தொகைக்கே ஒப்பந்தம் செய்து கொள்ள முடியும்.

உதாரணமாக டூ பிளசிஸை வாங்குவதற்கு சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகள் போட்டியிட்டு, இறுதியாக சிஎஸ்கே அணி ஏலத்தில் வெல்லும் பட்சத்தில், அவர் சென்னை அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும். ஆனால் ஆர்சிபி அணி டூ பிளசிஸை மீண்டும் வாங்க நினைத்தால், சிஎஸ்கே அணி கொடுக்க முன்வந்த அதே தொகையை கொடுத்து ஒப்பந்தம் செய்து கொள்ளலாம்.
இதுவரை ரைட் டூ மேட்ச் வாய்ப்பு இப்படி தான் பின்பற்றப்பட்டு வந்தது. ஆனால் இம்முறை ரைட் டூ மேட்ச் வாய்ப்பை பயன்படுத்தும் முறையில் பிசிசிஐ மாற்றம் கொண்டு வந்துள்ளது. அதாவது, ஒரு வீரரை வாங்க இரு அணிகள் போட்டியிட்டு, இறுதியாக ஒரு அணி ஒப்பந்தம் செய்யும் போது, திடீரென ரைட் டூ மேட்ச் வாய்ப்பை பயன்படுத்தி மீண்டும் பழைய அணி வாங்கி கொள்ளும் முறை மாற்றப்பட்டுள்ளது.
இம்முறை ரைட் டூ மேட்ச் வாய்ப்பை பயன்படுத்தி குறிப்பிட்ட வீரரை வாங்க முயற்சிக்கும் போது, ஏலத்தில் வென்ற அணிக்கும் மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படும். இதன் மூலமாக மீண்டும் அந்த வீரருக்கான ஏலம் தொடங்கப்படும் என்று தெரிய வந்துள்ளது. உதாரணமாக டூ பிளசிஸை ரூ.5 கோடிக்கு ரைட் டூ மேட்ச் வாய்ப்பை பயன்படுத்தி ஆர்சிபி அணி ஒப்பந்தம் செய்ய முயற்சித்தால், சிஎஸ்கே அணிக்கு மீண்டும் ஏலம் கேட்க வாய்ப்பு அளிக்கப்படும்.
அந்த ஏலத்தில் டூ பிளஸிஸின் ஏலத் தொகை ரூ.8 கோடியாக உயர்த்தப்படும் பட்சத்தில், அப்போதும் ரைட் டூ மேட்ச் வாய்ப்பை ஆர்சிபி அணி பயன்படுத்த வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூ-ட்யூப் சேனலில் பேசி வந்தார். ரைட் மேட்ச் வாய்ப்பிற்கு எதிராக பேசிய அஸ்வின், அதன் மூலமாக வீரர்களுக்கான ஊதிய விவகாரத்தில் அநீதி நடப்பதாக குற்றம்சாட்டினார்.
அஸ்வின் பேசுகையில், ஐபிஎல் தொடரில் ஒரு வீரரின் மதிப்பு ஏலத்தின் மூலமாக மட்டுமே இறுதி செய்யப்பட வேண்டும். அதனை விடுத்து ஏலம் முடிவடைந்த பின், ரைட் டூ மேட்ச் வாய்ப்பை பயன்படுத்தி ஒரு அணி அதே தொகைக்கு வாங்கி கொள்வது சரியல்ல. ஏனென்றால் அந்த வீரர் மற்றொரு அணிக்கும் தேவையாக இருக்கும் போது, மீண்டும் ஏலம் தொடங்கப்படுவதே சரியான அணுகுமுறை என்று தெரிவித்தார். இந்த நிலையில் அஸ்வினின் கோரிக்கைகள் பிசிசிஐ தரப்பில் செயல்படுத்தப்பட்டுள்ளது ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.