மும்பை: இந்திய அணி பேட்ஸ்மேன்கள் ஸ்பின்னர்களுக்கு எதிராக திணறுவதற்கு பிசிசிஐ நிர்வாகமே காரணம் என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் விமர்சித்துள்ளார். 5 நாட்கள் நடக்கும் டெஸ்ட் போட்டிகளுக்கு ஏற்ப பிட்ச்களை தயார் செய்யாமல், இரண்டரை நாட்களில் இந்தியா வெற்றி பெறுவதற்கான பிட்ச்களை தயார் செய்ததே இந்த பிரச்சனைக்கு காரணம் என்றும் கூறியுள்ளார்.
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. இதற்கு இலங்கை அணியின் பிட்ச் காரணமாக அமைந்தாலும், ஸ்பின்னர்களை எதிர்கொள்வதில் இந்திய அணி பேட்ஸ்மேன்களுக்கு இருந்த தயக்கமும், திறமையின்மையுமே முக்கிய காரணமாக அமைந்தது.

இதனால் இந்திய பேட்ஸ்மேன்கள் பலரும் ஸ்பின் பவுலிங்கை எப்படி எதிர்கொள்வது என்பதையே மறந்துவிட்டனர் என்ற விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் இந்திய பேட்ஸ்மேன்கள் ஸ்பின்னிற்கு சாதகமான பிட்ச்களில் திணறுவதற்கு இந்திய அணி நிர்வாகமும் முக்கிய காரணம் என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து ஹர்பஜன் சிங் பேசுகையில், நான் அதிகளவில் டர்னாகும் பிட்ச்களில் விளையாட தொடங்கிவிட்டோம். நாம் வெற்றிபெற வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டை இரண்டரை நாட்களுக்குள் வெல்ல வேண்டும் என்று நினைக்க கூடாது. சாதாரண பிட்ச்களை தயார் செய்துவிட்டு, 3 மற்றும் 4 ஆகிய நாட்களில் நன்றாக ஸ்பின்னாக கூடிய பிட்ச்களை தயார் செய்திருக்கலாம்.
அப்போதும் இந்திய அணி தான் வென்றிருக்கும். அதேபோல் பேட்ஸ்மேன்களுக்கு அதுபோன்ற பிட்ச்களில் செட்டலாகி ரன்கள் சேர்க்கவும் தெரிந்து கொண்டிருப்பார்கள். அதேபோல் தற்போது இந்திய அணி பேட்ஸ்மேன்கள் ஸ்பின்னர்களிடம் திணறுவதை பற்றி யாரும் பேசுவதே இல்லை. நாமே நமது பேட்ஸ்மேன்களின் மன உறுதியில் ஓட்டையை போட்டுவிட்டு, மோசமாக ஆட்டமிழக்க காரணமாக அமைந்திருக்கிறோம்.
இந்த தவறை திருத்துவதற்கான வாய்ப்பு இன்னும் இருக்கிறது. நல்ல பிட்ச்களில் விளையாடினாலும், இந்திய அணியை யாராலும் வீழ்த்த முடியாது. இந்திய அணியிடம் நல்ல வேகப்பந்துவீச்சாளர்களும், நல்ல ஸ்பின்னர்களும் இருக்கிறார்கள். அவர்களால் 5வது நாள் ஆட்டத்தில் கூட இந்திய அணியை வெற்றி பெற வைக்க முடியும். அதேபோல் நல்ல பிட்ச்களில் பேட்ஸ்மேன்கள் விளையாடும் போது, அதிகபடியான ரன்களை குவிப்பார்கள்.
இதன் மூலமாக அவர்களின் நம்பிக்கை அதிகரித்து, எந்த பிட்ச்களில் சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்புவார்கள். என்னை பொறுத்தவரை நமது பேட்ஸ்மேன்கள் ஸ்பின்னர்களுக்கு எதிராக பேட்டிங் செய்ய மறந்துவிட்டார்கள் என்று சொல்ல மாட்டேன். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மோசமான பிட்ச்களில் இந்திய அணி அதிகம் விளையாடி இருக்கிறது என்று விமர்சித்துள்ளார்.
செப்டம்பர் 19 முதல் வங்கதேசம் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ளது. அதன்பின் அக்டோபர் மாதத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது. சொந்த மண்ணில் நடக்கும் டெஸ்ட் தொடரில் இந்திய பேட்ஸ்மேன்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.