மும்பை: ஐபிஎல் தொடருக்கான ரிடென்ஷன் பாலிசி குறித்த அறிவிப்பு தாமதமாகியுள்ள நிலையில், அணி நிர்வாகங்கள் ரிடென்ஷன் பட்டியலை அறிவிக்க கூடுதல் அவகாசம் அளிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே ரிடென்ஷன் பாலிசி எப்படி இருக்கும் என்று அணிகளின் உரிமையாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் டிசம்பர் மாதம் நடக்கவுள்ள நிலையில், ஜூலை மாத இறுதியில் ஐபிஎல் உரிமையாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு அணி நிர்வாகங்களும் ஏராளமான கருத்துகள் அளிக்கப்பட்டன. இந்த கருத்துகளின் அடிப்படையில் பிசிசிஐ முடிவுகள் எடுக்கும் என்று கூறப்பட்டது.

ஆகஸ்ட் மாத இறுதியிலேயே ஐபிஎல் ரிடென்ஷன் செய்யப்படுவதற்கான விதிகள் குறித்து பிசிசிஐ வெளியிடும் என்று ஜெய் ஷா கூறியிருந்தார். ஆனால் செப்டம்பர் மாதம் இரண்டாவது வாரம் வரையிலும் ஐபிஎல் ரிடென்ஷன் விதிகள் வெளியாகவில்லை. இந்த நிலையில் செப்.29ஆம் தேதி பிசிசிஐ பொதுக் குழு கூட்டம் நடக்கவுள்ளது.
அந்த கூட்டம் முடிவடைந்த பின் ஐபிஎல் ரிடென்ஷன் விதிகள் வெளியாக வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. ஐபிஎல் பொதுக் குழுவுக்கும், ஐபிஎல் ரிடென்ஷன் விதிகளுக்கு எந்த சம்மந்தமும் இல்லையென்றாலும், செப்டம்பர் இறுதி வரை காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் பிசிசிஐ அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், ஐபிஎல் ரிடென்ஷன் விதிகள் வெளியாவதற்கு இன்னும் 10 நாட்கள் எடுக்க வாய்ப்புள்ளது.
2 வாரங்கள் வரை கூட ஆகலாம் என்று கூறியுள்ளனர். இதனால் ரிடெய்ன் செய்யப்பட்ட வீரர்களின் இறுதிப்போட்டியை அளிக்க அணி நிர்வாகங்களுக்கு அக்.15ஆம் தேதி தான் கடைசி நாளாகும். தற்போது ஐபிஎல் ரிடென்ஷன் விதிகள் இதுவரை வெளியாகவில்லை. இதனால் ரிடெய்ன் செய்யப்பட்ட வீரர்களின் பட்டியலை அறிவிக்க அணி நிர்வாகங்களுக்கு கூடுதல் கால அவகாசம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
நவம்பர் வரையிலும் இந்த கால அவகாசம் நீட்டிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் ரிடென்ஷனை பொறுத்தவரை 4 வீரர்கள் ரிடெய்ன் செய்யவும், 2 ஆர்டிஎம் வாய்ப்புகள் அளிக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளது. அதேபோல் 3 ரிடென்ஷன் மற்றும் 3 ஆர்டிஎம் வாய்ப்புகளும், 5 ரிடென்ஷன் மற்றும் 2 ஆர்டிஎம் வாய்ப்புகள் அளிக்கவும் வாய்ப்பிருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் சிஎஸ்கே அணி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்ட பழைய விதி மீண்டும் அமலுக்கு வர வாய்ப்புகள் உள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று 5 ஆண்டுகள் கடந்த வீரர்களை அன்கேப்ட் வீரராக கருதலாம். இதன் மூலமாக தோனியை சிஎஸ்கே அணி குறைந்த தொகைக்கு ரிடெய்ன் செய்ய முடியும்.
இந்த முடிவுக்கு பின் பிசிசிஐ மட்டுமல்லாமல் ஒளிபரப்பாளர்களும் இருக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. அதேபோல் பர்ஸ் வேல்யூ இந்த ஆண்டுக்கு கூடுதலாக ரூ.10 கோடி அளிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். ஏனென்றால் நட்சத்திர வீரர்களுக்கான ஊதியம் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.