மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் இந்தியா, பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் போர் நிறுத்தம் தற்போது முடிவுக்கு வந்ததை அடுத்து ஐபிஎல் தொடரை மீண்டும் தொடக்க பிசிசிஐ முடிவெடுத்திருக்கிறது.
அந்த வகையில் ஏற்கனவே தென்னிந்தியாவில் உள்ள சென்னை, ஐதராபாத், பெங்களூர் ஆகிய மூன்று நகரங்களில் ஐபிஎல் போட்டிகளை நடத்தி முடிக்க பிசிசிஐ முடிவு எடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அதன்படி மே 16ஆம் தேதி தொடங்கி மே 30ஆம் தேதி வரை ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படும் என்று செய்திகள் வெளியாகி இருக்கிறது.

இதற்காக அனைத்து அணிகளும் தங்களது வீரர்களை ஒருங்கிணைக்கும் படி பிசிசிஐ கூறியுள்ளது. பல வீரர்கள் நாடு திரும்பிய நிலையில் அவர்களை மீண்டும் அழைத்துக்கொண்டு பிசிசிஐயிடம் தகவல் தெரிவியுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் ஆர்சிபி அணியில் ஹேசல்வுட் சிஎஸ்கே அணியில், பிரவீஸ் உள்ளிட்ட வீரர்கள் ஏற்கனவே நாடு திரும்பி இருக்கிறார்கள்.
இதனால் அவர்கள் மீண்டும் இந்தியாவுக்கு திரும்புவார்களா என்று கேள்வி எழுந்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு அணிகளின் பலம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. சில வீரர்கள் வெளிநாட்டுக்கு சென்ற நிலையில் மீண்டும் ஐபிஎல் தொடரை நடத்துவதன் மூலம் அது தங்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் ஐபிஎல் அணிகள் முழித்துக் கொண்டு இருக்கின்றன.
தற்போது ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பிசிசிஐ முடிவு செய்துவிட்டது. மேலும் அட்டவணையையும் பிசிசிஐ தயார் செய்து விட்டது. தற்போது மத்திய அரசு போதிய அனுமதி மட்டும் வழங்கி விட்டால் இன்று இரவு இல்லை நாளை காலை அட்டவணை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே மே 25ஆம் தேதி வரை ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இறுதிப் போட்டி 30ஆம் தேதிக்கு மாற்றப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. சில போட்டிகளை மாலை இரவு என நடத்தலாம் என்ற முடிவிலும் பிசிசிஐ இருக்கின்றது.