மும்பை: நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இருந்து இளம் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் யாஷ் தயாள் நீக்கப்பட்டுள்ளார். இதனால் மெகா ஏலத்திற்கு முன்பாக அவரை அன்-கேப்ட் வீரராக ரீடெய்ன் செய்வதற்கான வாய்ப்பு ஆர்சிபி அணிக்கு கிடைத்திருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக ஐபிஎல் ரிடென்ஷன் தொடர்பான விவாதம் ரசிகர்களிடையே நடந்து வருகிறது. அதிக ஊதியம் கொடுக்க வேண்டுமென்பதால், 5 ரிடென்ஷன் வாய்ப்பினை அனைத்து அணிகளும் பயன்படுத்துவது கடினம் என்று பார்க்கப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு அணியும் அன்-கேப்ட் வீரரை ரீடெய்ன் செய்ய வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கின்றன.

குறிப்பாக லக்னோ அணி தரப்பில் மயங்க் யாதவ், கேகேஆர் அணி தரப்பில் ஹர்சித் ராணா மற்றும் ஐதராபாத் அணி தரப்பில் நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோரை ரீடெய்ன் செய்ய தீவிர முயற்சிகள் நடந்தன. ஆனால் மயங்க் யாதவ் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி இருவரும் வங்கதேச டி20 தொடரில் இந்திய அணிக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர். இன்று நடக்கும் கடைசி டி20 ஆட்டத்தில் ஹர்சித் ராணா அறிமுகம் செய்யப்படவுள்ளார்.
இதனால் 3 அணிகளின் உரிமையாளர்களும் சோகத்தில் உள்ளனர். இதனிடையே ஆர்சிபி அணி தரப்பில் யாஷ் தயாளை ரீடெய்ன் செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்பட்டது. ஆனால் வங்கதேச டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் யாஷ் தயாள் தேர்வு செய்யப்பட்டிருந்தார். இந்திய டெஸ்ட் அணிக்கு இடதுகை வேகப்பந்துவீச்சாளரின் அவசியம் அதிகமாகியுள்ளது.
இதன் காரணமாக யாஷ் தயாள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், வங்கதேச டெஸ்ட் தொடரில் வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2 போட்டிகளில் யாஷ் தயாள் பிளேயிங் லெவனில் இடம்பெறாத நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை.
இதனால் அக்.31ஆம் தேதிக்குள் யாஷ் தயாள் இந்திய அணியில் விளையாட வாய்ப்பில்லாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் ஆர்சிபி அணியால் எளிதாக யாஷ் தயாளை அன்-கேப்ட் வீரராக ரூ.4 கோடிக்கு ரீடெய்ன் செய்ய முடியும். இந்த வாய்ப்பினை ஆர்சிபி அணி நிர்வாகம் பயன்படுத்தி கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.