மும்பை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் வீரர்களுக்கும் அணி நிர்வாகத்திற்கும் பிசிசிஐ கடும் விதிமுறைகளை விதித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் போட்டிகளுக்கு முன்பு ஒவ்வொரு அணியும் பயிற்சி செய்ய கடும் கட்டுப்பாடுகளை பிசிசிஐ விதித்து இருக்கிறது.
போட்டி நடைபெறும் மைதானத்தில் முதல் ஆட்டத்திற்கு முன்பு வெறும் 7 முறை தான் பயிற்சி செய்ய வேண்டும் என்று பிசிசிஐ உத்தரவிட்டிருந்தது. இதனால் சிஎஸ்கே போன்ற அணிகள் தங்களது சொந்த மைதானத்திலேயே பயிற்சி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் மேலும் சில கட்டுப்பாடுகளை பிசிசிஐ விதித்திருப்பது வீரர்களுடைய கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது குறிப்பாக போட்டி முடிவடைந்த உடன் பரிசளிப்பு நிகழ்ச்சி நடக்கும். அதில் வீரர்கள் தங்களுடைய கை இல்லாத பனியன்களை அணிந்து கொண்டு வருவார்கள். இதன் மூலம் சிலர் விளம்பரங்கள் ஜெர்சியில் இடம்பெறாமல் போய்விடுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து தற்போது பிசிசிஐ புதிய விதி ஒன்றை வைத்துள்ளது. இனி கை இல்லாத பனியன்களை பரிசளிக்கும் நிகழ்ச்சிக்கு வீரர்கள் அணிந்து வரக்கூடாது. ஒரு முறை அணிந்து வந்தால் எச்சரிக்கை விடுக்கப்படும். இரண்டாவது முறையும் அதே தவறை செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. அதேபோன்று வீரர்கள் அணி நிர்வாகிகள் விளம்பரப் பலகைக்கு முன் தங்களது சார்களை போட்டு உட்கார கூடாது என்றும் பி சி சி ஐ அறிவித்துள்ளது.
இதேபோன்று குடும்பத்தினர் யாரும் இனி வீரர்களின் டிரெஸ்ஸிங் ரூமுக்கு வரக்கூடாது என்றும் பிசிசிஐ உத்தரவு போட்டு இருக்கிறது. போட்டிகள் நடைபெறாத நாளிலும் கூட குடும்பத்தினர் ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு வர பிசிசிஐ தடை விதித்திருக்கிறது. மேலும் வீரர்கள் தங்களுடைய சொந்த வாகனத்தில் எங்கும் செல்லக்கூடாது என்றும் அணி நிர்வாகம் வழங்கும் பேருந்தில் மட்டும்தான் வீரர்கள் பயணம் செய்ய வேண்டும் என்றும், குடும்பத்தினர் அந்த பேருந்தில் பயணம் செய்யக்கூடாது என்றும் பிசிசிஐ தடை விதித்து இருக்கிறது.
இது தொடர்பாக பிசிசிஐ நிர்வாகி ஒருவர் கூறுகையில், "ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணி மோசமாக விளையாடுவதை அடுத்து குடும்பத்தினர் வீரர்களுடன் செல்வதை அணி நிர்வாகம் தடுத்தது. இதன் பிறகு இந்திய அணியின் செயல்பாடு கொஞ்சம் முன்னேறி இருக்கிறது. இதனை ஐபிஎல் தொடரிலும் நாங்கள் அமல்படுத்த போகிறோம்."
"குடும்பத்தினர் வீரர்களுடன் செல்வதால் தங்களால் அணியை சிறந்த முறையில் நடத்த முடியவில்லை என சில அணிகள் குற்றம் சாட்டு இருந்தது. இதனால் தான் இந்த நடவடிக்கையை நாங்கள் கொண்டு வந்தோம் என்று தெரிவித்திருக்கிறார்"
எனினும் பிசிசியின் இந்த முடிவு சிஎஸ்கே அணியை வெகுவாக பாதிக்கும் என தெரிகிறது. ஏனென்றால் சிஎஸ்கே அணி எப்போதுமே வீரர்களின் குடும்பத்தை அழைத்து அவர்களுடன் தங்க வைக்கும். இதன் மூலம் இரண்டு மாதம் வரை குடும்பத்தினரை பிரிந்திருக்கும் வெளிநாட்டு வீரர்களுக்கு அது ஒரு வரப்பிரசாதமாக தெரியும்.
குடும்பத்தினர் வீரர்களுடன் தங்கும்போது அது அவர்களின் செயல்பாட்டை அதிகரிக்க செய்வதாக தான் சிஎஸ்கே அணி நம்புகிறது. தற்போது பிசிசிஐயின் இந்த தடை சிஎஸ்கே அணிக்கு தான் தலைவலியை கொடுக்கும். இதற்கு முக்கிய காரணம் வாட்சன், மோயின் அலி போன்ற வீரர்கள் எல்லாம் மற்ற அணியில் பெரிய அளவில் சோபிக்காத நிலையில் சென்னை அணிக்கு வந்த பிறகு மிகவும் அபாயகரமான வீரராக மாறினார்கள்.
இதற்கு காரணம் சிஎஸ்கே அணி தங்களை ஒரு குடும்பம் போல் நடத்துகிறது என்றும் மற்ற அணிகள் போல் இல்லாமல் குடும்பத்தினரையும் அழைத்து சிஎஸ்கே அணி எங்களுக்கு உறுதுணையாக இருக்கிறது என்று பல பேட்டிகளில் கூறி இருக்கிறார்கள். தற்போது பிசிசிஐ இதுக்கு தடை விதித்துள்ளதால் அது சிஎஸ்கே அணியில் செயல்பாட்டிற்கு ஒரு பெரிய தடையாக இருக்கும்.