மும்பை: ஐபிஎல் தொடரை மிஞ்சும் வகையில் "எல் பி எல்" என்ற ஒரு தொடரை பிசிசிஐ விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. "லெஜண்ட்ஸ் பிரீமியர் லீக்" என்பதன் சுருக்கமே எல்பிஎல் என்பதாகும். இந்த தொடரில் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்களை வைத்து ஒரு டி20 தொடரை பிசிசிஐ நடத்த உள்ளது.
முன்னாள் இந்திய வீரர்கள் சிலர் ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்களுக்கான டி20 தொடரை நடத்த வேண்டும் என யோசனை கூறி இருந்தனர். சமீபத்தில் இங்கிலாந்தில் உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் டி20 தொடர் வெற்றிகரமாக நடைபெற்றது. உலகின் ஆறு முக்கிய கிரிக்கெட் அணிகளை சேர்ந்த முன்னாள் வீரர்கள் பங்கேற்ற அந்த தொடர் கோடிக்கணக்கான பார்வையாளர்களை பெற்றது.

குறிப்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் மோதிய இறுதிப் போட்டியை பல கோடி பேர் நேரலையில் பார்த்துள்ளனர். அதில் யுவராஜ் சிங் தலைமையிலான இந்தியா சாம்பியன்ஸ் அணி கோப்பையையும் வென்றது. அந்த தொடர் ஒரு தனியார் நிறுவனத்தால் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த தொடரின் வெற்றி மற்றும் அதற்கு கிடைத்த விளம்பரதாரர்கள் ஆகியவற்றை பார்த்து பெரிய கிரிக்கெட் அமைப்புகளே வியந்து போனார்கள்.
இதற்கு முன் இந்தியாவில் ரோடு சேஃப்டி டி20 போட்டி ஒன்றில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் யுவராஜ் சிங் தலைமையிலான அணிகள் மோதி இருந்தன. அந்தப் போட்டிக்கும் நல்ல வரவேற்பு இருந்தது. இதையெல்லாம் முன்னாள் இந்திய வீரர்கள் பிசிசிஐ அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டி உள்ளனர்.
இதன் மூலம் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் பலருக்கு வருமானம் ஈட்டும் வாய்ப்பு கிடைக்கும். இந்த தொடரை நடத்தும் பிசிசிஐக்கும் மிகப்பெரிய லாபம் கிடைக்கும். சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், வீரேந்தர் சேவாக், சுரேஷ் ரெய்னா ஆகியோர் விளையாடுவதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இவர்களது தலைமையில் அணிகளை உருவாக்கினால் அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் எனவும் பிசிசிஐ-க்கு யோசனை கூறப்பட்டு இருக்கிறது.
ஒரு சிறிய தொடராக லெஜண்ட்ஸ் பிரீமியர் லீக் தொடரை நடத்தலாமா? என பிசிசிஐ ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இன்னும் ஓராண்டுக்குள் இந்த தொடர் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது. இந்த தொடரில் இந்திய வீரர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது.