பெங்களூர்: ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் அனைவருக்கும் இனி போட்டிக்கான ஊதியமாக ரூ.7.5 லட்சம் பெறுவார்கள் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார். இதன் மூலமாக குறைந்த தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்களாலும் ரூ.1.05 கோடி வரை ஊதியம் பெற முடியும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இந்திய அணி வீரர்கள் அனைவருக்கும் வருடாந்திர ஒப்பந்தம் மட்டுமல்லாமல், போட்டிக்கான ஊதியமும் அளிக்கப்பட்டு வருகிறது. அதாவது ஒவ்வொரு போட்டிக்கும் இந்திய அணி வீரர்களுக்கும் ஊதியம் அளிக்கப்படும். அதன்படி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு போட்டிக்கு ரூ.15 லட்சம் வரை ஊதியம் அளிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு சீசனில் 75 சதவிகிதத்திற்கும் அதிகமான போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு போட்டி ஊதியமாக ரூ.45 லட்சம் அளிக்கப்படும். அதேபோல் ஒருநாள் கிரிக்கெட்டில் போட்டி ஊதியமாக ரூ. 6 லட்சமும், டி20 கிரிக்கெட்டில் போட்டி ஊதியமாக ரூ.3 லட்சமும் அளிக்கப்படும். இது ரஞ்சி கிரிக்கெட் தொடரிலும் பின்பற்றப்பட்டு வருகிறது.
முதல்தர போட்டிகளில் முதல் 20 போட்டிகளுக்குள் விளையாடும் வீரர்களுக்கு ஒரு நாளுக்கு ரூ. 40 ஆயிரம் ஊதியமாக அளிக்கப்படும். அதேபோல் 21 முதல் 40 போட்டிகள் வரை ஒரு வீரருக்கு ஒருநாள் ஊதியமாக ரூ.50 ஆயிரமும், 50 போட்டிகளுக்கு மேல் விளையாடும் வீரர்களுக்கு ஒருநாள் ஊதியமாக ரூ.60 ஆயிரம் அளிக்கப்படும். ஆனால் ஐபிஎல் தொடரில் போட்டி ஊதியம் பெறுவதற்கு சில அளவீடுகள் பின்பற்றப்பட்டு வந்தன.
குறைந்தபட்சம் 20 ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடிய வீரர்களுக்கு மட்டுமே போட்டிக்கான ஊதியம் அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் பெங்களூரில் நடந்த பிசிசிஐ ஆலோசனை கூட்டத்தில் ஐபிஎல் தொடரில் அனைத்து வீரர்களுக்கும் போட்டிக்கான ஊதியமாக ரூ.7.5 லட்சம் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தனது எக்ஸ் தள பக்கத்தில், நமது கிரிக்கெட் வீரர்களுக்கு ஐபிஎல் தொடரிலும் போட்டிக்கான ஊதியமாக ரூ.7.5 லட்சம் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்கிறோம். இதன் மூலமாக ஐபிஎல் தொடரின் அனைத்து லீக் போட்டிகளிலும் விளையாடும் வீரர்களால் ரூ.1.05 கோடி ஊதியமாக பெற முடியும். இதற்காக ஒவ்வொரு அணியும் ரூ.12.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளார்.
இதன் மூலம் குறைந்தபட்ச தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்படும் வீரர்களாலும் நல்ல ஊதியத்தை பெற முடியும். ஏனென்றால் ரூ.20 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்யப்படும் வீரர்கள், அனைத்து போட்டிகளிலும் விளையாடும் போது அவர்களால் ரூ.1.05 கோடியை ஊதியமாக பெற முடியும். இது இளம் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலருக்கும் உதவியாகவும், உத்வேகம் அளிக்கும் முடிவாகவும் அமைந்துள்ளது.