மும்பை: ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் குறித்த விவாதங்கள் மீண்டும் சூடுபிடித்துள்ளது. கடந்த மாத இறுதியில் ஐபிஎல் உரிமையாளர்களின் ஆலோசனை கூட்டம் மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் பல்வேறு விதிகளை கொண்டு வரவும், ரீடென்ஷனில் சில மாற்றங்களை கொண்டு வரவும் அறிவுறுத்தினார்.
ஆனால் மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய இரு அணிகளும் மெகா ஏலமே தேவையில்லை என்று பிடிவாதம் பிடித்தனர். ஒரு கட்டத்தில் கேகேஆர் அணியின் உரிமையாளர் ஷாருக் கான் மற்றும் பஞ்சாப் அணியின் உரிமையாளர் நெஸ் வாடியா இருவருக்கும் வாக்குவாதமே நடைபெற்றுள்ளது. இதனால் பிசிசிஐ தரப்பில் உயர்மட்டக் குழுவில் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டு மெகா ஏலத்தின் போது ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் 4 வீரர்களை மட்டும் தக்க வைத்துக் கொள்ள அனுமதியளிக்கப்பட்டது. ஆனால் 2018ஆம் ஆண்டு மெகா ஏலத்தின் போது 4 வீரர்களை தக்க வைக்கவும், 2 வீரர்களை ஆர்டிஎம் மூலம் வாங்கவும் அனுமதி வழங்கப்பட்டது. இதனால் இம்முறை என்ன மாதிரியான முடிவு எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த நிலையில் பிசிசிஐ தரப்பில் பழைய மாடலுக்கு செல்ல முடிவுகள் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பழைய முறையில் 4 ரீடென்ஷனில் 3 இந்திய வீரர்களையும், ஒரு வெளிநாட்டு வீரரையும் ஒரு அணியால் தக்க வைத்து கொள்ள முடியும். அதேபோல் ஆர்டிஎம் மூலம் 2 வீரர்களை ஏலத்திற்கான தொகையை கொடுத்து வாங்கி கொள்ள முடியும்.
இதனால் இந்த மெகா ஏலத்திற்கும் 4+2 என்ற ரீடென்ஷன் மற்றும் ஆர்டிஎம் ஆகிய 2 வாய்ப்புகளை அணிகளுக்கு பிசிசிஐ தரப்பில் அளிக்கலாம் என்று பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மெகா ஏலம் தொடர்பாக பிசிசிஐ நிர்வாகிகள் மற்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஆலோசனை நடத்தியுள்ளனர். இதுதொடர்பான முடிவுகள் ஆகஸ்ட் மாதம் இறுதியில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஒருவேளை பிசிசிஐ தரப்பில் 4+2 என்ற வாய்ப்பை ஐபிஎல் அணிகளுக்கு வழங்கினால், நிச்சயம் மும்பை மற்றும் கேகேஆர் அணிகளுக்கு மிகப்பெரிய சிக்கல் உருவாகும். ஏனென்றால் இரு அணிகளும் அதிகளவிலான இந்திய வீரர்கள் நட்சத்திரங்களாக உருவாக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்களை எதிரணிகளுக்கு தாரை வார்க்க வேண்டிய நிலை உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.