மும்பை: 2025 ஐபிஎல் தொடரில் தோனிக்காக முக்கிய விதி ஒன்றை பிசிசிஐ மாற்ற உள்ளதாக கூறப்படுகிறது. 2025 ஐபிஎல் தொடரில் தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட வேண்டும் என்பதற்காகவே பிசிசிஐ விதிகளை மாற்ற உள்ளதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அது குறித்து பார்ப்போம்.
2025 ஐபிஎல் தொடருக்கு முன்பாக மெகா ஏலம் நடைபெற உள்ளது. மெகா ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு ஐபில் அணியும் மூன்று அல்லது நான்கு வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொண்டு மற்ற வீரர்களை அணியில் இருந்து நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

இதற்கு முன் நான்கு வீரர்களை மட்டமே ஒரு ஐபிஎல் அணி தக்க வைக்க முடியும் என்ற விதி இருந்தது. ஆனால், இதில் மாற்றம் செய்ய வேண்டும் என சிஎஸ்கே அணி கோரிக்கை வைத்து இருந்தது. சமீபத்தில் நடந்த ஐபிஎல் உரிமையாளர்கள் கூட்டத்தில் பிசிசிஐ-இடம் இது குறித்து சிஎஸ்கே அணி பேசி இருந்தது. அப்போது குறைந்தது ஐந்து முதல் ஆறு வீரர்களை தக்க வைக்க அனுமதிக்க வேண்டும் என கோரி இருந்தது.
இதற்கு முக்கிய காரணம், நான்கு வீரர்களை மட்டுமே தக்க வேண்டும் என பிசிசிஐ கூறினால் சிஎஸ்கே அணியால் தோனியை தக்க வைக்க முடியாமல் போகும். ஏனெனில், அந்த அணியின் முக்கிய வீரர்களாக இருக்கும் ருதுராஜ் கெய்க்வாட். ரவீந்திரர் ஜடேஜா, சிவம் துபே மற்றும் மதிஷா பதிரானா ஆகியோரை அந்த அணி இழக்க முடியாது.
எனவே, அவர்கள் நால்வரையும் தக்க வைக்குமாறு தோனி சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் கூறி இருக்கிறார். ஐந்து வீரர்களை தக்க வைக்க பிசிசிஐ அனுமதி அளித்தால் மட்டுமே என்னை தக்க வையுங்கள் என தோனி கூறி இருக்கிறார். அந்த கருத்தை தான் பிசிசிஐ-இடம் சிஎஸ்கே கூறி இருந்தது.
தற்போது பிசிசிஐ ஆறு வீரர்கள் வரை தக்க வைக்க அனுமதி அளிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. அதன் மூலம் 2025 ஐபிஎல் தொடரில் தோனி சிஎஸ்கே அணியில் ஆடுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. பிசிசிஐ தோனிக்காகவே இந்த விதியை தளர்த்தி இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
தோனி ஐபிஎல் தொடரில் விளையாடினால் அவர் எந்த மைதானத்திற்கு சென்றாலும் அங்கு அவரது ரசிகர்கள் படை திரண்டு வருகின்றனர். அது ஐபிஎல்-க்கு மிகப்பெரிய விளம்பரமாக அமைகிறது. இந்தியர்கள் மட்டும் இன்றி வெளிநாட்டு ரசிகர்களும் இதை வியப்புடன் பார்த்து வருகின்றனர்.
ரோஹித் சர்மா அல்லது விராட் கோலிக்கும் அதிக ரசிகர்கள் இருக்கின்றனர். ஆனால், தோனிக்கு இருப்பது போல அனைத்து மைதானங்களிலும் அவர்களுக்கு ரசிகர்கள் கூடுகிறார்களா? என்று கேட்டால் தோனி அளவுக்கு இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அதை உணர்ந்த பிசிசிஐ, சிஎஸ்கே விரும்பியபடி ஆறு வீரர்களை தக்க வைக்க அனுமதி அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மற்ற ஐபிஎல் அணிகளுக்கும் இதில் மகிழ்ச்சி தான். ஏனெனில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் போன்ற அணிகள் பல ஆண்டுகளாக 7 - 8 முக்கிய வீரர்களை தங்கள் அணியில் இடம் பெறச் செய்து உள்ளன. அவர்களை மாற்றினால் அணியின் சமநிலை பறிபோகும் என கருதுகின்றனர். எனவே, பிசிசிஐ எடுத்திருக்கும் முடிவு அவர்களுக்கும் சாதகமாகவே உள்ளது.