மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் முன் எப்போதும் போல் இல்லாத அளவுக்கு பல வீரர்கள் மாற்றப்பட்டு இருக்கிறார்கள். குறிப்பாக சிஎஸ்கே அணியில் பல நட்சத்திர வீரர்கள் காயம் காரணமாக வெளியேறினார்கள். குறிப்பாக அந்த அணியின் கேப்டன் ருதுராஜ் காயம் காரணமாக வெளியேறினார்.
இதைப் போன்று அந்த அணியில் இருந்த இளம் வீரர் குர்பஜனத் சிங் மற்றும் வான்ஸ் பேடி ஆகியோர் காயம் காரணமாக விளையாடவில்லை. அவர்களுக்கு மாற்று வீரராக சிஎஸ்கே அணி மூன்று பேரை தேர்வு செய்தது.

17 வயது வீரரான ஆயுஷ் மாத்ரே மற்றும் தென்னாப்பிரிக்காவின் குட்டி ஏபி டிவில்லியர்ஸ் என்று அழைக்கப்படும் பிரவீஸ், 28 பந்துகளில் சதம் அடித்த உர்வில் பட்டேல் உள்ளிட்ட வீரர்களை சிஎஸ்கே அணி மாற்றி விடுவதாக அறிவித்தது. இந்த மூன்று வீரர்களுமே ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய ரன்களை சேர்த்தார்கள்.
இதனால் சிஎஸ்கே அணி அடுத்த சீசனில் இந்த மூன்று வீரர்களையும் பயன்படுத்திக் கொண்டு காயம் அடைந்த வீரர்களை விடுவித்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மினி ஏலத்திற்கு முன்பே சிஎஸ்கே அணி தங்களுக்கு வேண்டிய வீரர்களை வாங்கி விட்டதாக ரசிகர்களும் கிண்டல் செய்தார்கள்.
இந்த நிலையில் ஐபிஎல் தொடர் போர் பதற்றம் காரணமாக நிறுத்தப்பட்ட நிலையில் பல வெளிநாட்டு வீரர்கள் தங்களது தாயகம் சென்றனர். இந்த சூழலில் மீண்டும் ஐபிஎல் தொடர் தொடங்கிய நிலையில் சில வீரர்கள் வரவில்லை. அதற்கு பதிலாக மாற்று வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். தற்போது இது குறித்து அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ள பிசிசிஐ மாற்று வீரர்களை அடுத்த ஆண்டு தக்க வைத்துக் கொள்ள முடியாது என்றும் மினி ஏலம் மூலம்தான் வீரர்களை தேர்வு செய்ய முடியும் என்று அறிவித்தது.
இது சிஎஸ்கே அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஏன் என்றால் சிஎஸ்கே அணி மூன்று மாற்று வீரர்களை அடையாளம் கண்ட நிலையில் அவர்களை மற்ற அணி ஏலத்தில் எடுத்து விடும் என்று ரசிகர்கள் அஞ்சினர். ஆனால் அதில் தான் ஒரு ட்விஸ்ட் ஏற்பட்டு இருக்கிறது. இந்த விதி கடைசி இரண்டு போட்டிகளுக்கு முன்பு மாற்றப்பட்ட வீரர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், அதற்கு முன்பு காயம் காரணமாக மாற்றப்பட்ட வீரர்களுக்கு இந்த விதி பொருந்தாது என்றும் பிசிசிஐ கூறியிருக்கிறது. இதனால் சிஎஸ்கே அணி ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்து இருக்கிறது.