மும்பை: நடப்பாண்டில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பலரின் எதிர்பார்ப்பும் எத்தனை வீரர்களை தக்க வைக்க அனுமதியளிக்கப்படும் என்பதில் தான் உள்ளது. ஆனால் அடுத்த ஐபிஎல் தொடருக்கு முன்பாக பிசிசிஐ பல்வேறு புதிய மாற்றங்களை கொண்டு வர முடிவு எடுத்துள்ளது தெரிய வந்துள்ளது.
3 சீசன்களுக்கு முன்பாக ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை 10ஆக அதிகரிக்கப்பட்டது. இதனால் ஐபிஎல் போட்டிகளின் எண்ணிக்கை 74ல் இருந்து 94ஆக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஐபிஎல் நிர்வாகம் மற்றும் உரிமையாளர்களின் ஒப்பந்தமும் அப்படிதான் செய்யப்பட்டிருந்தது. ஆனால் அந்த வடிவம் இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை.

இதனால் மெகா ஏலத்துடன் சேர்த்து போட்டிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பேசுகையில், ஐபிஎல் உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டுள்ளன. பெரும்பான்மை கருத்துகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதோ, அதேபோல் தனி கோரிக்கைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.
சில அணிகள் சிறப்பாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதனால் அவர்காள் மெகா ஏலம் தேவையில்லை என்று கூறி வருகின்றனர். இன்னொரு பக்கம் சில அணிகள் சிறப்பாக கட்டமைக்க முடியவில்லை என்று கூறி, மெகா ஏலம் கட்டாயம் தேவை என்கிறார்கள். ஒரு அணியை உருவாக்க கன்சிஸ்டன்சி முக்கியம் தான். ஆனால் ஐபிஎல் தொடரின் சுவாரஸ்யமே, மொத்தமாக கலைத்து போட்டு மீண்டும் கட்டமைப்பதில் தான் உள்ளது.
அதேபோல் ஐபிஎல் போட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு குறித்தும் இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இது அனைவரும் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவாகும். வீரர்களின் வேலைப்பளு மற்றும் சர்வதேச போட்டிகளை பாதிக்காமல் நடத்துவதற்கான நேரமும் அவசியம். போட்டிகளை அதிகரிப்பது குறித்து ஒப்பந்தத்தில் இருந்தாலும், அதனை பிசிசிஐ தான் முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
10 போட்டிகளை கூடுதலாக நடத்த வேண்டும் என்றால் கூட, நிச்சயம் ஒரு வாரம் கூடுதல் காலம் பிசிசிஐ-க்கு தேவையாக இருக்கும். ஏற்கனவே ஐபிஎல் வீரர்களுக்கான முகாமில் சர்வதேச வீரர்கள் பங்கேற்க முடியாத சூழல் உள்ளது. அதேபோல் 2ஆம் பாதி தொடர், பிளே ஆஃப் போட்டிகளின் போதும் சர்வதேச வீரர்கள் நாடு திரும்புவது அதிகரித்து வருகிறது. இதனால் பிசிசிஐ எப்படி ஐபிஎல் போட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.