மும்பை: 2025 ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி தக்கவைக்கப்பட வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக பிசிசிஐ ஒரு விதியை மாற்ற உள்ளது. இது குறித்து சமீபத்தில் நடந்த ஐபிஎல் உரிமையாளர்கள் கூட்டத்தில் மற்ற அணிகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். ஆனாலும், பிசிசிஐ எதிர்ப்பை மீறி இந்த விதியை அமல்படுத்த உள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்திய அணி வீரர், ஐந்து ஆண்டுகளுக்கு சர்வதேச போட்டிகளில் விளையாடாத பட்சத்தில் அவர் "அன்கேப்டு" (uncaped) வீரராக அறிவிக்கப்படுவார் என்ற நடைமுறை இருந்தது. அதாவது, அவர் உள்ளூர் போட்டிகளில் மட்டும் பங்கேற்கும் அன்கேப்டு பிரிவில் இடம் பெறுவார். அதன் மூலம், ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன் உள்ளூர் வீரர் ஒருவரை மட்டும் தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற விதியை பயன்படுத்தி அந்த வீரரை தக்க வைத்துக் கொள்ள முடியும்.

பொதுவாக மெகா ஏலத்துக்கு முன் மூன்று உள்ளது நான்கு வீரர்களை தக்க வைத்துக்கொள்ள முடியும். அதில் ஒரு வீரர் உள்ளூர் வீரராக இருக்க வேண்டும் என்ற விதி முன்பு இருந்தது. பின்னர் அது தேவையற்ற விதி எனக் கூறி பிசிசிஐ அதை நீக்கி இருந்தது. அதைத்தான் இப்போது சிஎஸ்கே மீண்டும் கொண்டு வர வேண்டும் என பிசிசிஐ-இடம் கேட்டு இருந்தது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத தோனியை உள்ளூர் வீரராக அறிவிக்க வேண்டி அந்த விதியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தது சிஎஸ்கே நிர்வாகம். மேலும், உள்ளூர் வீரர் ஒருவரை தக்க வைப்பதற்கான விதியையும் மீண்டும் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தது.
இதில் ஐந்து ஆண்டுகளாக சர்வதேச போட்டிகளில் விளையாடாத இந்திய அணி வீரரை உள்ளூர் வீரராக அறிவிக்கும் விதி மாற்றத்துக்கு மற்ற ஐபிஎல் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், தோனி ஐபிஎல் தொடரில் விளையாடினால் அதன் மூலம் கிடைக்கும் அதிக பார்வையாளர்கள் எண்ணிக்கை மற்றும் விளம்பர வருவாயை கணக்கிட்ட பிசிசிஐ, சிஎஸ்கே நிர்வாகம் கேட்ட விதிமாற்றத்தை செய்ய உள்ளது.