மும்பை: ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்னும் ஒரு வாரத்தில் நடக்கவுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் நிர்வாகிகள் மாற்றத்திற்கு தயாராகி வருகின்றன. ஆனால் சென்னை அணியை பொறுத்தவரை எந்தவித சிக்கலும் இல்லாமல் மெகா ஏலத்திற்கு தயாராகி வருகிறது.
இருந்தாலும் சிஎஸ்கே அணியின் ஜாம்பவான் வீரரான தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே உள்ளது. ஏனென்றால் கடந்த சீசனிலேயே கேப்டன்சியை ருதுராஜ் கெய்க்வாட்-டம் ஒப்படைத்த நிலையில், பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாடி பொளந்து கட்டினார். 11 இன்னிங்ஸ்களில் விளையாடி 13 சிக்ஸ் உட்பட 161 ரன்களை விளாசினார். அதேபோல் 8 கேட்ச்களையும் பிடித்தார்.

இதனால் தோனியால் இன்னும் ஓரிரு சீசன்கள் விளையாட முடியும் என்று பார்க்கப்படுகிறது. அதற்கேற்றபடி இம்பேக்ட் பிளேயர் விதியும் இருப்பதால், ஃபினிஷராக பேட்டிங்கில் மட்டும் தோனி கவனம் செலுத்தவும் வாய்ப்பு உள்ளதாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் தோனி இதுவரை அடுத்த சீசன் குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை.
எப்போது தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை அறிவிக்க வேண்டுமோ, அப்போது தான் சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் தனது முடிவை கூறுவார். இந்த நிலையில் அடுத்த வாரம் நடக்கவுள்ள ஐபிஎல் நிர்வாகக் குழு மற்றும் உரிமையாளர்களின் ஆலோசனை கூட்டத்தில் 3 முக்கியமான விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. அதில் முதல் விஷயமாக எத்தனை வீரர்களை ரீ-டெய்ன் செய்யலாம் என்பது தான்.
தொடர்ந்து ஒவ்வொரு அணியின் பர்ஸ் வேல்யூவை அதிகரிக்கலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. கடைசியாக இம்பேக்ட் பிளேயர் விதி குறித்தும் ஒவ்வொரு அணியிடமும் கருத்து கேட்கப்படவுள்ளது. இதுவரை 3 சீசன்களாக இம்பேக்ட் பிளேயர் விதி ஐபிஎல் தொடரில் பின்பற்றப்பட்டு வருகிறது. இதனை சிஎஸ்கே அணி மிகச்சிறப்பாக பயன்படுத்தி அசத்தல் வெற்றிகளை பெற்று வந்தது.
அடுத்த சீசனில் கூட இம்பேக்ட் பிளேயர் விதி இருந்தால், நிச்சயம் தோனி விளையாடுவார் என்று பார்க்கப்படுகிறது. ஆனால் இம்பேக்ட் பிளேயர் விதி குறித்து ஐபிஎல் உரிமையாளர்களிடம் கருத்துக் கேட்பது சிஎஸ்கே நிர்வாகம் மற்றும் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தோனிக்கு எதிரானதாக மட்டுமல்லாமல், இளம் வீரர்களுக்கான வாய்ப்பாகவும் இருந்து வந்தது.
இந்திய வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, முகேஷ் குமார், அக்சர் படேல் உள்ளிட்டோர் இம்பேக்ட் பிளேயர் விதிக்கு எதிராக கருத்து கூறி வருகின்றனர். இது அணி நிர்வாகங்கள் பிரதிபலிக்கும் பட்சத்தில், அடுத்த சீசனில் இம்பேக்ட் பிளேயர் விதி நீக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.