மும்பை: ஐபிஎல் தொடரில் செயல்படுத்தப்பட்டு வரும் இம்பேக்ட் பிளேயர் விதிகள் மற்றும் கடந்த ஆண்டு அறிமுகமான ஓவருக்கு 2 பவுன்சர் விதி ஆகியவற்றை தொடரலாமா, வேண்டாமா என்பது குறித்து பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தெரிய வந்துள்ளது. இம்பேக்ட் பிளேயர் விதி குறித்து ஆலோசிக்கப்படுவதை புரிந்து கொள்ள முடிந்தாலும், பவுன்சர் விதி குறித்து ஆலோசிக்கப்படுவது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிசிசிஐ ஒவ்வொரு முறையும் ஐபிஎல் தொடரில் புதிய விதிகளை கொண்டு வருவதற்கு முன்பாக உள்நாட்டு கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி டிராபியில் செயல்படுத்தி பரிசோதனை செய்து பார்க்கும். இம்பேக்ட் பிளேயர் விதிகள் முதல்முறையாக சையத் முஷ்டாக் அலி தொடரில் தான் செயல்படுத்தப்பட்டு, அதன்பின் ஐபிஎல் தொடரில் அறிமுகம் செய்யப்பட்டது.

அதன்படி கடந்த ஆண்டு சையத் முஷ்டாக் அலி தொடரில் பவுலர்கள் ஓவருக்கு 2 பவுன்சர்களை வீசலாம் என்ற விதி அறிமுகம் செய்யப்பட்டது. அதனை பவுலர்கள் சிறப்பாக பயன்படுத்திய நிலையில், கடந்த ஐபிஎல் தொடரில் 2 பவுன்சர்கள் விதிமுறை கொண்டு வரப்பட்டது. இருந்தாலும் இம்பேக்ட் பிளேயர் விதிகள் குறித்து பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.
இம்பேக்ட் பிளேயர் விதி காரணமாக ஆல்ரவுண்டர்களுக்கான முக்கியத்துவம் குறைந்து வருவதாக சில விமர்சனங்கள் கூறப்பட்டன. இருந்தாலும் ஒவ்வொரு போட்டியிலும் 2 இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது சாதாரண விஷயமல்ல என்பதால், ரவிச்சந்திரன் அஸ்வின், முன்னாள் வீரர் ஜாகீர் கான் உள்ளிட்ட சில வீரர்கள் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, முகேஷ் குமார், அக்சர் படேல் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பிசிசிஐ தரப்பில் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில், டெல்லி ஆணி உரிமையாளர்களும் இம்பேக்ட் பிளேயர் விதிகளுக்கு எதிராக கருத்து கூறியிருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால் மற்ற அணி நிர்வாகங்கள் எந்த ஆட்சேபணையும் கூறவில்லை.
இதன் காரணமாக பிசிசிஐ தரப்பில் இம்பேக்ட் பிளேயர் விதியுடன் சேர்த்து 2 பவுன்சர் விதி குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. 2 பவுன்சர் விதிமுறைகள் பவுலர்களுக்கு சிறிது உதவியாக அமைந்தன. கடைசி ஓவரில் கூட பவுன்சர் வீசி பேட்ஸ்மேன்களின் அதிரடியை கட்டுப்படுத்த பவுலர்களுக்கு சிறந்த வாய்ப்பாக அமைந்தது. பவுன்சர்கள் வீச முயன்று சில ஒய்டுகள் சென்றாலும், சரியான வேகத்தில் பவுன்சரை பயன்படுத்துவதில் பவுலர்கள் தீவிரமாக இருந்தனர்.
யாரும் 2 பவுன்சர் விதி குறித்து பேசாமல் இருக்கும் நிலையிலும், பிசிசிஐ ஆலோசிப்பது ஏன் என்ற குழப்பமும் அதிகரித்துள்ளது. இதனிடையே சையத் முஷ்டாக் அலி தொடர் வரும் நவம்பர் மாதம் தொடங்கவுள்ளது. இதற்கான மைதானங்கள் இன்னும் இறுதி செய்யப்படாத சூழலில், பல்வேறு மாநில கிரிக்கெட் வாரியங்களும் இன்னும் விதிகள் குறித்து பிசிசிஐ தரப்பில் எந்த அறிவுறுத்தலும் அளிக்கப்படவில்லை என்று கூறுகின்றனர்.
இதனால் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா விரைவில் இம்பேக்ட் பிளேயர் விதி மற்றும் 2 பவுன்சர் ஆகிய விதிகள் குறித்து முடிவெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சையத் முஷ்டாலி அலி தொடரில் 2 விதிகளும் பின்பற்றப்படும் பட்சத்தில் நிச்சயம், ஐபிஎல் தொடரிலும் பின்பற்ற அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.