லக்னோ: யுபி டி20 லீக்கில் காசி ருத்ராஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ ஃபால்கான்ஸ் அணிக்காக ஆடிய புவனேஷ்வர் குமார் 4 ஓவர்களை தொடர்ச்சியாக வீசி 4 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு மெய்டன் உட்பட 20 டாட் பால்கள் வீசியுள்ள சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் டிஎன்பிஎல் தொடரை போல் உத்தரப் பிரதேசத்திலும் யுபி டி20 லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதன் நேற்றைய ஆட்டத்தில் காசி ருத்ராஸ் அணியை எதிர்த்து லக்னோ ஃபால்கான்ஸ் அணி விளையாடியது. இதில் டாஸ் வென்ற காசி ருத்ராஸ் அணியின் கேப்டன் கரண் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கினார்.

மறுபக்கம் லக்னோ ஃபால்கான்ஸ் அணியின் கேப்டன் ப்ரியன் கார்க் புதிய திட்டத்துடன் களமிறங்கினார். தொடக்கத்திலேயே புவனேஷ்வர் குமாரை அட்டாக்கில் கொண்டு வந்தார். முதல் 2 ஓவர்களில் புவனேஷ்வர் குமார் வெறும் 2 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து எதிரணிக்கு அழுத்தத்தை அதிகரித்தார். இருந்தாலும் மற்றொரு பவுலரான அபினந்தன் சிங் 2 ஓவர்களில் 18 ரன்களை விட்டுக் கொடுத்ததால், அழுத்தம் குறைந்தது.
ஆனால் புவனேஷ்வர் குமாரின் ஸ்பெல்லை கேப்டன் ப்ரியன் கார்க் நிறுத்தவில்லை. 3வது ஓவரையும் புவனேஷ்வர் குமார் வீச அழைக்கப்பட, காசி ருத்ராஸ் பேட்ஸ்மேன்கள் திணறி போயினர். ஏனென்றால் அந்த ஓவர் மெய்டனாக வீசப்பட, பின்னர் 4வது ஓவரில் வெறும் 2 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஸ்பெல்லை முடிவுக்கு கொண்டு வந்தார்.
புவனேஷ்வர் குமாரின் பவுலிங்கால் காசி ருத்ராஸ் அணி பவர் பிளே ஓவர்களில் வெறும் 23 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இறுதியாக 20 ஓவர்களில் 111 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. பீஸ்ட் மோடில் பவுலிங் செய்த புவனேஷ்வர் குமார் 4 ஓவர்களில் 4 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு மெய்டன் உட்பட 20 டாட் பால்களை வீசி மிரட்டினார்.
இதனால் ரசிகர்கள் பலரும் "விண்டேஜ் புவி இஸ் பேக்" என்று கொண்டாடி வருகின்றனர். பின்னர் களமிறங்கிய லக்னோ ஃபால்கான்ஸ் அணி 13.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டுகள் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பெற்றது. இந்திய அணியின் கதவுகள் அடைக்கப்பட்டாலும், யுபி டி20 லீக்கில் விளையாடி புவனேஷ்வர் குமார் இளம் வீரர்களுக்கு ஊக்கமளித்து வருகிறார்.
34 வயது மட்டுமே புவனேஷ்வர் குமாருக்கு ஆகியிருப்பதால், ஐபிஎல் மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் புவனேஷ்வர் குமார் தொடர்ச்சியாக பங்கேற்று வருகிறார். ஐபிஎல் தொடருக்கு முன்பாக மெகா ஏலம் நடக்கவிருப்பதால், புவனேஷ்வர் குமார் மெகா ஏலத்தில் பெரிய தொகைக்கு ஏலத்தில் செல்ல வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.
தற்போது ஐதராபாத் அணிக்காக விளையாடி வரும் புவனேஷ்வர் குமார் அந்த அணியால் தக்க வைக்கப்பட வாய்ப்புகள் குறைவு என்று பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட், கிளாசன் ஆகிய மூவரையும் கட்டாயம் ஐதராபாத் அணி தக்க வைக்கும். அதேபோல் அபிஷேக் சர்மா மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி இருவரையும் தக்க வைக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. இதனால் புவனேஷ்வர் குமாரை ஏலத்தில் ஆர்டிஎம் பயன்படுத்தி வாங்குவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.