பெங்களூர்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆர் சி பி அணி மோதும் 52 ஆவது லீக் ஆட்டம் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. பெங்களூரில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இன்றும் மழை பெய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் டக்வொர்த் லூயிஸ் விதி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் முதலில் பந்து வீசுவதே சிறப்பான முடிவாக இருக்கும். இந்த தருணத்தில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி, நாங்கள் முதலில் பந்து வீச தான் முடிவெடுத்து இருக்கின்றோம்.

நாங்கள் கடைசி நான்கு போட்டிகளில் சிறப்பாக விளையாட விரும்புகிறோம். இதன் மூலம் அடுத்த ஆண்டு ஒரு நல்ல அணியை கட்டமைக்க முடியும். மேலும் அடுத்த சீசனில் எந்த வீரர் எந்த இடத்தில் விளையாடுவார்கள் என்பதும் தெரியவரும். இந்த நான்கு போட்டிகளிலும் நாங்கள் வெற்றி பெற முயற்சி செய்கின்றோம்.
ஆடுகளத்தை பொருத்தவரை மழை காரணமாக தார்பாயால் மூடப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாக தான் எப்போதுமே இருக்கும். முதல் சில ஓவர்கள் பிறகு பந்து பேட்டிற்கு நன்றாக வரும் எங்கள் அணியில் உள்ள பேட்டர்கள் தங்களுடைய பலத்தை புரிந்து கொண்டு விளையாட வேண்டும்.
பவுலர்கள் திட்டத்தை சரியாக செயல்படுத்த வேண்டுமே என்ற நினைப்பில் விளையாடாமல் முழு நம்பிக்கையுடன் செயல்படுங்கள் என்று தோனி கூறினார். மேலும் சிஎஸ்கே அணியில் இன்றைய ஆட்டத்திலும் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. இதனை தொடர்ந்து பேசிய ஆர் சி பி அணி கேப்டன் ரஜத் பட்டிதார், நாங்களும் முதலில் பந்து வீச தான் இருந்தோம்.
ஆடுகளம் பெரிய அளவில் மாறாது. எனினும் முதலில் பேட்டிங் செய்வதால் பெரிய இலக்கை நிர்ணயத்து சிஎஸ்கேவை நெருக்கடியில் வைத்துக்கொள்ள முயற்சி செய்கின்றோம். எங்கள் அணியில் ஒவ்வொரு வீரர்களும் சிறப்பான மனநிலையில் இருக்கிறார்கள். எங்கள் அணி வீரர்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கின்றது. நாங்கள் அனைவரும் நல்ல பார்மில் இருப்பது நல்ல அம்சமாக கருதுகின்றேன்.
எங்களுக்கு எஞ்சியுள்ள நான்கு போட்டிகளிலும் சிறப்பான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்கின்றோம். நாங்கள் பிளே ஆப்க்கு தகுதி அடைய வேண்டும் என்பதில் கவனம் செலுத்தாமல் இந்த நான்கு போட்டிகளிலும் சிறந்த ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைக்கின்றோம் என்று ரஜத் பட்டிதார் கூறினார். இந்த நிலையில் rcb அணியில் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஹேசல்வுட் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக லுங்கி கிடி விளையாடுகிறார்.