மும்பை: டி20 உலகக்கோப்பை தொடரை இந்திய அணி வெல்வதற்கு முக்கியமான காரணம் ஜஸ்பிரிட் பும்ரா. ஐசிசி தொடரில் நாயகன் விருதை வென்ற முதல் இந்திய பவுலர் என்ற சாதனையையும் பும்ரா படைத்தார். இதனையடுத்து பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, அவரை வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே ஆஸ்திரேலியா அணியில் எப்படி பேட் கம்மின்ஸை கேப்டனாக நியமித்தார்களோ, அதேபோல் இந்திய அணியும் பும்ராவை கேப்டனாக நியமனம் செய்ய வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன. ஏற்கனவே இந்திய அணியை வழிநடத்திய அனுபவம் பும்ராவுக்கு இருப்பதால், அவருக்கான ஆதரவு குரல்கள் எதிர்பார்த்ததை விடவும் அதிகமாக இருந்தன.

இந்த விவகாரம் தொடர்பாக தினேஷ் கார்த்திக் பேசுகையில், பும்ரா குறித்து அனைவரும் சொல்லும் கருத்துகளும் சரி தான். அவரின் அனுபவம், களத்தில் கோபத்தை வெளிப்படுத்தாது, அவரின் முதிர்ச்சி எல்லாம் தேவைக்கேற்ப அதிகமாகவே உள்ளது. ஆனால் பும்ரா ஒரு வேகப்பந்துவீச்சாளர் என்பதை அனைவரும் மறந்துவிடுகிறார்கள். அவரால் அனைத்து நேரங்களில் 3 வடிவிலான கிரிக்கெட்டையும் விளையாட முடியாது.
தேர்வுக் குழுவினருக்கு இருக்கும் மிகப்பெரிய கேள்வியாக இது இருக்கும். பும்ராவின் ஃபிட்னஸை தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டிய பொறுப்பு பிசிசிஐ-க்கு உள்ளது. என்னை பொறுத்தவரை பும்ராவை நாம் கோஹினூர் வைரம் போல் பாதுகாக்க வேண்டும். முக்கியமான தொடர்கள், போட்டிகளில் தான் பும்ராவை விளையாட வைக்க வேண்டும்.
அதேபோல் பும்ரா எந்த தொடரில் களமிறங்கினாலும் அவரின் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவராக இருப்பது இந்திய அணிக்கு மிகப்பெரிய சாதகம். ஒருவேளை ஏதாவது ஒரு டி20 தொடரில் விளையாடும் போது காயமடைந்து முக்கியமான டெஸ்ட் தொடரில் பும்ரா விளையாட முடியாத சூழல் ஏற்பட்டால், இந்திய அணி பின்னடைவை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.
அண்மையில் மும்பையில் நடந்த டி20 உலகக்கோப்பை கொண்டாட்டத்தின் போது விராட் கோலி பேசுகையில், இந்தியாவின் பொக்கிஷமாக பும்ராவை அறிவித்தால், அதில் முதல் கையெழுத்தை நான் போட்டு தருகிறேன் என்று பாராட்டி இருந்தார். தற்போது தினேஷ் கார்த்திக்கும் அவரை கோஹினூர் வைரம் என்று பாராட்டி பெருமிதம் சேர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.