பெங்களூரு: 2025 ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று ரசிகர்களின் நீண்ட நாள் ஏக்கத்தைத் தணித்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி, தற்போது அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வந்துள்ளது. அணியின் உரிமையாளரான டியாகியோ (Diageo) நிறுவனம், சுமார் 2 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.16,800 கோடி) மதிப்பிற்கு அணியை விற்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்னும் நான்கு மாத காலத்தில், அவசரமாக இந்த விற்பனையை முடிக்க திட்டமிட்டு உள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னணி மதுபான நிறுவனமான டியாகியோ, யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் (USL) மூலம் ஆர்சிபி அணியின் ஐபிஎல் (ஆண்கள்) மற்றும் டபிள்யூபிஎல் (பெண்கள்) அணிகளை நிர்வகித்து வருகிறது.

நவம்பர் 5-ஆம் தேதி, பம்பாய் பங்குச் சந்தையில் (BSE) தாக்கல் செய்த அறிக்கையில், டியாகியோ நிறுவனம் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. அதில், யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ராயல் சேலஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் (RCSPL) மீதான தனது முதலீட்டை மறுஆய்வு செய்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
"ஆர்சிபி அணி எங்களுக்கு ஒரு மதிப்புமிக்க மற்றும் முக்கியச் சொத்தாக இருந்து வருகிறது. இருப்பினும், எங்களின் முதன்மைத் தொழிலான மதுபான வர்த்தகத்திற்கு, கிரிக்கெட் வணிகம் ஒரு முக்கிய அங்கமாக (Core Business) இல்லை. எனவே, இந்த முடிவை எடுத்துள்ளோம்," என்று யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பிரவீன் சோமேஷ்வர் தெரிவித்துள்ளார்.
மார்ச் 31, 2026-க்குள் இந்த விற்பனை நடவடிக்கைகளை முழுமையாக முடிக்க டியாகியோ திட்டமிட்டுள்ளது. ஊடகத் தகவல்களின்படி, நடப்பு சாம்பியனாக இருக்கும் ஆர்சிபி அணியின் மதிப்பு சுமார் 2 பில்லியன் டாலராக நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் 31, 2025 உடன் முடிவடைந்த நிதியாண்டில், யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் மொத்த லாபத்தில், விளையாட்டுப் பிரிவு (ஆர்சிபி) மட்டும் 8.3% பங்களிப்பை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மார்ச் 31-க்குள் விற்பதன் மூலம் அவர்களின் ஆர்சிபி அணியை விற்றதன் மூலம் கிடைத்த லாபத்தை கணக்கில் காட்ட முடியும். எனவே தான் இந்த அவசர விற்பனை ஏற்பாடு நடந்து வருவதாக கூறப்படுகிறது.
பல ஆண்டுகளாகக் கோப்பை வெல்ல முடியாமல் தவித்து வந்த ஆர்சிபி அணி, 2025 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி முதல் முறையாகச் சாம்பியன் பட்டம் வென்றது. மகளிர் பிரீமியர் லீக் (WPL) தொடரிலும் ஆர்சிபி அணிக்குச் சொந்தமான அணி உள்ளது.
வெற்றிக் களிப்பில் இருந்த ரசிகர்களுக்கு, அணி விற்பனைக்கு வந்துள்ளது என்ற செய்தி சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், புதிய உரிமையாளர்கள் யார், எவ்வளவு தொகைக்கு அணி கைமாறப்போகிறது என்பது வரும் மாதங்களில் தெரியவரும்.