சென்னை: ரவிச்சந்திரன் அஸ்வின் 2025 ஐபிஎல் ஏலத்தில் வெறும் 2 கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்கப்படுவார் என ஒரு தகவல் வலம் வருகிறது. இதற்கு முக்கியமான காரணம் ஒன்றும் சொல்லப்படுகிறது. எந்த அணியும் அஸ்வினை ஏலத்தில் வாங்க முயற்சிக்காது என கிரிக்கெட் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.
2024 ஐபிஎல் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். அந்த ஐபிஎல் தொடர் முடிந்த சில நாட்களுக்கு பின் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உயிர் திறன் செயல்பாட்டு மையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். தனது கிரிக்கெட் வாழ்வின் துவக்கம் முதல் 2015 வரை ரவிச்சந்திரன் அஸ்வின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடினார்.

மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் ஸ்பான்சர் பெற்ற வீரராக இருந்தார். 2016இல் சிஎஸ்கே அணியிலிருந்தும், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்திலிருந்தும் அவர் விலகினார். சுமார் 9 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அவர் இந்தியா சிமெண்ட்ஸ் குழுமத்துடன் கைகோர்த்து இருக்கிறார்.
மீண்டும் வந்த அஸ்வினுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உயர் செயல்பாட்டு திறன் மையத்தின் தலைமை பொறுப்பும் வழங்கப்பட்டு இருக்கிறது. அவர் சிஎஸ்கே அணியின் பொறுப்பில் இருப்பதால் 2025 ஐபிஎல் தொடரில் அவர் ஏலத்தில் பங்கேற்றாலும் எந்த அணியும் அவரை வாங்காது.
அப்படி வாங்கினால் சிஎஸ்கே அணியின் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் நிலையில் உள்ள ஒருவரை, தங்கள் அணியில் நியமிப்பது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தும் என்பதால் எந்த அணியும் அவரை வாங்க முயற்சிக்காது என விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். அந்த வகையில் பார்த்தால் ஏலத்தில் அதிகபட்ச அடிப்படை விலைக்கே அஸ்வினை சிஎஸ்கே அணி வாங்கக் கூடும்.
2024 ஐபிஎல் ஏலத்தின் போது ஒரு வீரருக்கான அதிகபட்ச அடிப்படை விலை 2 கோடி ரூபாயாக இருந்தது. அந்த வகையில் பார்த்தால் அஸ்வின் 2025 ஐபிஎல் தொடரில் அதிகபட்ச அடிப்படை விலையான 2 கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே அணியால் வாங்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. ஒருவேளை இந்த ஏலத்தின் போது அதிகபட்ச அடிப்படை விலையை பிசிசிஐ அதிகரித்தால், அந்த விலைக்கே அஸ்வினை சிஎஸ்கே வாங்கக் கூடும்.