சென்னை: இந்திய அணியின் மூத்த வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரராகவும் இருக்கும் ரவீந்திர ஜடேஜா பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினராக இணைந்து இருக்கிறார். அவரது மனைவி ரிவாபா குஜராத் மாநில பாஜக கட்சியில் தீவிரமாக செயல்பட்டு, தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். அவரை தொடர்ந்து இந்திய அணியில் இடம் பெற்று இருக்கும் ரவீந்திர ஜடேஜா பாஜகவில் உறுப்பினராக இணைந்து இருக்கிறார்.
இதை அடுத்து ரவீந்திர ஜடேஜா கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற போகிறார் என்ற கருத்துக்கள் பரவி வருகின்றன. இது குறித்து பொதுவான ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை கூறி வந்தாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் இதை வரவேற்பார்களா? என்ற கேள்வி உள்ளது. கடந்த பத்து ஆண்டுகளாக மத்தியில் பாஜக அரசு ஆளுங்கட்சியாக உள்ளது. இந்த சூழ்நிலையிலும் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு அதிக எண்ணிக்கையிலான சட்டமன்ற உறுப்பினர்களோ, நாடாளுமன்ற உறுப்பினர்களோ இல்லை. பொதுவாக தமிழ்நாட்டில் பாஜக கட்சிக்கு பெரிய வரவேற்பு இல்லை என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.

இந்த சூழ்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முக்கிய வீரராக இருக்கும் ரவீந்திர ஜடேஜா பாஜக உறுப்பினராக ஆகி இருப்பதை தமிழ்நாட்டை சேர்ந்த சிஎஸ்கே ரசிகர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள்? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. வலதுசாரி சிந்தனையாளர்கள் இதை வரவேற்பார்கள் என்றாலும் இடதுசாரி சிந்தனையாளர்கள் மற்றும் நடுநிலையாளர்கள் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருக்கும்போதே ரவீந்திர ஜடேஜா ஒரு அரசியல் கட்சியில் இணைந்திருப்பதை எப்படி எடுத்துக் கொள்வார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ரவீந்திர ஜடேஜாவை பொறுத்தவரை கிரிக்கெட்டில் அவரது கடைசி காலத்தில் இருக்கிறார். 35 வயதான நிலையில் அவர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து விட்டார். தற்போது ஒருநாள் அணி மற்றும் டெஸ்ட் அணியில் மட்டுமே இடம்பெற வாய்ப்பு உள்ளது. தற்போது இடது கை சுழற் பந்துவீச்சாளர்களான அக்சர் பட்டேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தொடர்ந்து இந்திய அணியில் இடம் பிடித்து வருகின்றனர். அதன் மூலம், இடது கை சுழற் பந்துவீச்சாளரான ரவீந்திர ஜடேஜாவுக்கான வாய்ப்புகள் குறையும் என மறைமுகமாக பிசிசிஐ அவருக்கு உணர்த்தி உள்ளது.
அதை புரிந்து கொண்டு தான் ஜடேஜா அரசியலை நோக்கி செல்கிறார் என கூறப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் ரவீந்திர ஜடேஜாவுக்கு கேப்டன் பதவி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தோனிக்கு அடுத்து ஜடேஜா தான் சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. 2022 ஐபிஎல் தொடரில் அவருக்கு கேப்டன் பதவியும் வழங்கப்பட்டது. ஆனால், முதல் பாதி வரை கேப்டனாக இருந்தார் ஜடேஜா. அதில் பல போட்டிகளில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தது.
இதனை அடுத்து அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். ஒன்ரராவ் ஆண்டுகள் கழித்து இளம் வீரரான ருதுராஜ் கெய்க்வாட் சிஎஸ்கே அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இதன் மூலம் ரவீந்திர ஜடேஜாவுக்கு சிஎஸ்கே அணியிலும் இனி முன்னேற்றம் காணும் வாய்ப்பு இல்லை. இந்த நிலையில், அவர் சிஎஸ்கே அணியில் இருந்து விலகி முழு நேரமாக அரசியலில் கவனம் செலுத்துவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.