சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இதுவரை சில வீரர்களை அந்த அணி நீக்கியதே இல்லை. ஒவ்வொரு ஏலத்திற்கு முன்பும் அந்த முக்கிய வீரர்களை மட்டும் எப்போதுமே சிஎஸ்கே அணி தக்க வைத்துக் கொள்ளும். டிவைன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா போன்ற வீரர்கள் சிஎஸ்கே அணியில் இடம்பெற்றது முதல் எப்போதும் அந்த அணியை விட்டு நீக்கப்பட்டதே இல்லை.
அந்த வகையில் முக்கியமான வீரராக இருப்பவர் தோனி. ஐபிஎல் தொடரின் முதல் ஏலத்தில் தோனியை சிஎஸ்கே அணி வாங்கியது. அப்போது முதல் இப்போது வரை அவர் அந்த அணியின் ஆணிவேராக இருக்கிறார். அந்த அணியை 100 சதவீதம் அவர்தான் கட்டமைத்து இருக்கிறார். ஆனால், 2025 ஐபிஎல் தொடருக்கு முன் தோனியை அணியை விட்டு நீக்க வேண்டிய நிலை ஏற்படுமோ? என்ற சந்தேகம் ஏற்பட்டு இருக்கிறது. இது மட்டும் நடந்தால் ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக சிஎஸ்கே அணி தோனியை நீக்கி இருக்கும்.

2025 ஐபிஎல் தொடருக்கு முன் மெகா ஏலம் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் நான்கு அல்லது ஐந்து வீரர்களை மட்டுமே தக்க வைக்க முடியும். எத்தனை வீரர்களை ஒரு அணி தக்க வைக்கலாம்? என்ற தெளிவான அறிவிப்பை பிசிசிஐ விரைவில் வெளியிட உள்ளது. அதன்படி, நான்கு வீரர்களை மட்டுமே தக்க வைக்க முடியும் என பிசிசிஐ கூறினால் தோனியை சிஎஸ்கே அணியில் இருந்து நீக்க வேண்டிய நிலை ஏற்படும்.
ஏனெனில், தோனியால் 2025 ஐபிஎல் தொடரில் பங்கேற்றாலும் முழு வீச்சில் விளையாட முடியாது. அவர் விக்கெட் கீப்பிங் செய்ய மாட்டார் எனவும், சில விமர்சகர்கள் கூறி வருகின்றனர். எனவே, தோனி இம்பேக்ட் வீரராக கடைசி சில ஓவர்கள் பேட்டிங் செய்ய மட்டுமே வருவார் என கூறப்படுகிறது. 43 வயதாகும் நிலையில் அவரால் முழு நேரமாக போட்டிகளில் பங்கேற்க முடியாது.
இந்த நிலையில் அவரை சிஎஸ்கே அணியில் தக்க வைத்தால் அவருக்கு அதிக சம்பளம் அளிக்க வேண்டிய நிலை ஏற்படலாம். அதனால், வேறு சிறந்த வீரர்களை ஏலத்தில் வாங்க முடியாமலும் போகலாம். ஒரு ஐபிஎல் அணி குறிப்பிட்ட அளவு தொகையை மட்டுமே வீரர்கள் சம்பளத்துக்கு செலவிட வேண்டும் என்ற விதி இருப்பதால் இந்த சிக்கல் எழும்.
ஒரு ஐபிஎல் அணி நான்கு வீரர்களை மட்டுமே தக்க வைக்கலாம் என்ற விதி அமல்படுத்தப்பட்டால் சிஎஸ்கே அணியில் ருதுராஜ் கெய்க்வாட், சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா மற்றும் மதிஷா பதிரானா அல்லது டெவான் கான்வே தக்க வைக்கப்படுவார்கள். இவர்கள் அனைவருமே சிஎஸ்கே அணியின் எதிர்காலத்துக்கு முக்கியமான வீரர்கள் ஆவர். தோனியை 2025 ஐபிஎல் ஏலத்திற்கு முன் தக்க வைத்தால் அவரால் அடுத்த மூன்று ஆண்டுகளும் முழுமையாக விளையாட முடியுமா? என கூற முடியாது. அந்த சூழ்நிலையில் தோனியை சிஎஸ்கே அணி விடுவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். தோனியும் இதே கருத்தை தான் சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் கூறி இருக்கிறார். ஐந்து அல்லது ஆறு வீரர்களை தக்க வைக்க பிசிசிஐ அனுமதி அளித்தால் மட்டுமே தோனி சிஎஸ்கே அணியில் இடம் பெறுவார்.
சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முழு அளவில் அணியை வழிநடத்திச் செல்ல இன்னும் ஓராண்டு தேவை என்பதால் தோனி 2025 ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என முன்னாள் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.