சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தனது தேசிய அணியான நியூசிலாந்து அணியை கூட புறக்கணித்து இருக்கிறார் அதிரடி துவக்க வீரர் டெவான் கான்வே. மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மற்ற டி20 அணிகளான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ், மற்றும் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிகளிலும் அவர் இடம் பெற்று இருக்கிறார்.
சிஎஸ்கே அணியை நம்பி நியூசிலாந்து அணியின் முழு நேர ஒப்பந்தத்தில் கையெழுத்து இட மறுத்து விட்டார் டேவிட் கான்வே. இந்த நிலையில், 2025 ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன் அவரை எப்படி தக்க வைப்பது? என்பதில் சிஎஸ்கே அணி நிர்வாகத்திற்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. 2025 ஐபிஎல் ஏலத்திற்கு முன் ஒவ்வொரு அணியும் குறைந்த அளவிலான வீரர்களை மட்டுமே தக்க வைக்க முடியும். இதற்கு முன்பு நான்கு வீரர்களை மட்டுமே தக்க வைக்க அனுமதி அளித்து இருந்தது பிசிசிஐ.

2025 ஐபிஎல் ஏலத்திற்கு பின் எத்தனை வீரர்களை தக்க வைக்கலாம் என்பது குறித்து பிசிசிஐ விரைவில் அறிவிப்பை வெளியிட உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், மூத்த வீரர் ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே மற்றும் மதிஷா பதிரானா ஆகிய நால்வரை எந்த சூழ்நிலையிலும் தக்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
உள்ளூர் வீரரை தக்க வைக்க அனுமதி அளித்தால் தோனியை உள்ளூர் வீரராக காட்டி சிஎஸ்கே அணி தக்க வைக்கும் என கூறப்படுகிறது. இந்த ஐந்து வீரர்களையும் சிஎஸ்கே அணி தக்க வைக்கும். ஒரு வேளை, 6 வீரர்களை தக்க வைக்க பிசிசிஐ அனுமதி அளித்தால் மட்டுமே டெவான் கான்வே-வை சிஎஸ்கே அணியால் தக்க வைக்க முடியும்.
அப்படி இல்லை எனில் ஏலத்தில் தான் அவரை வாங்க வேண்டும். "ரைட் டூ மேட்ச்" என்ற விதியை அமல்படுத்தினால் டெவான் கான்வே-வை வேறு அணிகள் வாங்கினாலும் ரைட் டூ மேட்ச் அட்டையை பயன்படுத்தி சிஎஸ்கே அணி அவரை தங்கள் அணிக்கு மீண்டும் கொண்டுவர முடியும். ஆனால். இது சிக்கலான விஷயமாக இருக்கும்.
ஏனெனில் டெவான் கான்வே பெயர் ஏலத்திற்கு சென்று விட்டாலே அடுத்து அவருக்காண ஏலத் தொகை எவ்வளவு தூரம் செல்லும் என்பதை பொறுத்தே சிஎஸ்கே அணியால் அவரை ஏலத்தில் வாங்க முடியும். டெவான் கான்வே-விற்கும் சிஎஸ்கேவுக்குமான உறவு மிகவும் வலுவாக இருக்கிறது. கடந்த 2024 டி20 உலக கோப்பைக்கு முன் அவர் காயத்தில் சிக்கியிருந்தார். அதனால், ஐபிஎல் தொடரில் அவரால் விளையாட முடியவில்லை.
அந்த சூழ்நிலையிலும் அவரை அணியை விட்டு சிஎஸ்கே அணி நிர்வாகம் தங்களுடனே பயணிக்க செய்தது. மேலும், அவருக்கான மருத்துவ உதவிகளை செய்தது. எனவே, டெவான் கான்வே-வை சிஎஸ்கே அணி அத்தனை எளிதில் கைவிட்டு விடாது. அதே சமயம் அவரை மெகா ஏலத்திற்கு இடையே எப்படி அணியில் தக்க வைப்பது என்பதில் சிஎஸ்கே நிர்வாகத்துக்கு அழுத்தம் ஏற்பட்டு இருக்கிறது