சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருந்த தீபக் சாஹர், 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டார். இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரிய ஏமாற்றத்தை அளித்தது. தீபக் சாஹரின் விக்கெட்களை வீழ்த்தும் திறன் சிஎஸ்கே அணிக்கு ஒரு பெரிய இழப்பாக பார்க்கப்பட்டது.
ஆனால், தற்போது அதே மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி வாங்கிய இளம் வீரர் அன்ஷுல் கம்போஜ், ரஞ்சி டிராபி தொடரில் சிறப்பாக பந்துவீசி விக்கெட் வேட்டை ஆடி வருவது நம்பிக்கையை அளித்துள்ளது. "தீபக் சாஹர் போனால் என்ன, இந்த சிங்கக்குட்டி போதும்" என சிஎஸ்கே ரசிகர்கள் இதை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

2024-25 ரஞ்சி டிராபி தொடரில் அன்ஷுல் கம்போஜ் இதுவரை 12 இன்னிங்ஸ்களில் 35 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். ரஞ்சி டிராபி கால் இறுதிப் போட்டியில் ஹரியானா அணிக்காக விளையாடி வரும் அவர், மும்பை அணியின் மூன்று விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார். இந்த தொடரில் அவரது பந்துவீச்சு சராசரி 11.56 என்பதாக உள்ளது.
இதுவே இந்த ரஞ்சி சீசனில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் மிகச் சிறப்பான பந்துவீச்சு சராசரி ஆகும். மேலும் அவர் முக்கிய அணிகளுக்கு எதிராகவும் விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டுதான் அவர் ரஞ்சி டிராபியில் ஒரே இன்னிங்ஸில் பத்து விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்தார். இதன் மூலம் சிஎஸ்கே அணிக்கு ஜாக்பாட் அடித்துள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவரை 3.40 கோடி ரூபாய்க்கு வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு அன்ஷுல் கம்போஜ் 2024 ஐபிஎல் தொடரில்தான் அறிமுகமாகி இருந்தார். அப்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்திருந்தார்.
மூன்று போட்டிகளில் மட்டும் விளையாடிய அவர் 60 பந்துகளை வீசி 114 ரன்களை விட்டுக் கொடுத்து ஏமாற்றம் அளித்து இருந்தார். ஆனால் தற்போது அவர் உச்சகட்ட ஃபார்மில் இருப்பதால் சிஎஸ்கே அணி அவரை சரியாக பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.