அகமதாபாத்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17 ஆண்டு ஐபிஎல் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத மோசமான நிலையை சந்தித்து இருக்கிறது. அந்த அணி இதுவரை புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு சென்றதே இல்லை. முதன்முறையாக 2025 ஐபிஎல் தொடரில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்திருக்கிறது.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் தனது 14 போட்டிகள் அனைத்தையும் விளையாடி முடித்துள்ளது. நேற்று தனது கடைசி போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக விளையாடியது. அந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபாரமாக விளையாடி 83 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியைப் பெற்றது. எனினும், இது அந்த அணிக்கு ஒரு ஆறுதல் வெற்றியாகவே அமைந்தது.

இந்த ஆண்டு இதுவரை விளையாடிய 14 போட்டிகளில் நான்கு வெற்றிகளை மட்டுமே சென்னை சூப்பர் கிங்ஸ் பெற்று இருக்கிறது. அதன் மூலம் எட்டு புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. ஒன்பதாவது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் 8 புள்ளிகளுடன் இருந்தாலும், நிகர ரன் ரேட் அடிப்படையில் சிஎஸ்கே அணியை விட முன்னிலையில் உள்ளது.
2008 முதல் 2019 வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பொற்காலம் என்றே சொல்ல வேண்டும். இந்த காலகட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒவ்வொரு ஆண்டும் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருந்தது. ஐபிஎல் வரலாற்றின் மாபெரும் வெற்றிகரமான அணி என்ற பெயருடன் வலம் வந்தது.
2020 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதன்முறையாக லீக் சுற்றுடன் வெளியேறியது. பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை. அப்போது கூட எட்டு அணிகள் இடம்பெற்றிருந்த ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்தை சிஎஸ்கே அணி பெற்றிருந்தது. அதன் பிறகு 2021 ஆம் ஆண்டு பலமாக முன்னேறி ஐபிஎல் கோப்பையை வென்றது.
2022 ஆம் ஆண்டு மீண்டும் சொதப்பிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்தது. அப்போது பத்து அணிகள் இருந்தது குறிப்பிடத்தக்கது. அடுத்து 2023 ஆம் ஆண்டு மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை வென்றது.
அடுத்து 2024 ஆம் ஆண்டு புதிய கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தது. மூன்றாவது முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்திருந்தது.
அதைத் தொடர்ந்து 2025 ஆம் ஆண்டு எப்படியும் சிஎஸ்கே அணி கோப்பை வென்றுவிடும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்த நிலையில், ஐபிஎல் வரலாற்றிலேயே படுமோசமான ஆட்டத்தை ஆடியது சிஎஸ்கே அணி. தான் விளையாடிய 14 போட்டிகளில் நான்கு வெற்றிகளை மட்டுமே பெற்றது. மேலும் புள்ளிப்பட்டியலில் முதன்முறையாக கடைசி இடத்துடன் தொடரை முடித்துக் கொண்டுள்ளது.