மும்பை: 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் மூன்று தென்னாப்பிரிக்க வீரர்களை வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அதில் முதல் வீரர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 2024 ஐபிஎல் தொடரில் விளையாடிய ஜெரால்ட் கோட்ஸி. இவர் தென்னாப்பிரிக்க ஒரு நாள் அணியில் இடம் பெற்று 2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பையில் சிறப்பாக பந்து வீசி பிரபலம் அடைந்தார்.
அதற்கு முன்பே அவர் தென்னாப்பிரிக்கா டி20 லீக் தொடரில் இடம் பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ்-இன் சகோதர அணியான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடி வந்தவர். எனவே, சிஎஸ்கே நிர்வாகத்துக்கும் ஜெரால்டு கோட்ஸிக்கும் நல்ல புரிதல் உள்ளது.

ஜெரால்டு கோட்ஸியின் வளர்ச்சியில் சிஎஸ்கே-வின் பங்கும் உள்ளது. 2024 ஐபிஎல் தொடரில் அவரை சிஎஸ்கே அணியால் வாங்க முடியாத நிலையில் 2025 ஐபிஎல் தொடரில் அவரை சிஎஸ்கே வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. 2024 ஐபிஎல் தொடரில் ஜெரால்டு கோட்ஸி 10 போட்டிகளில் 13 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். அதே சமயம் அதிக ரன்களை விட்டுக் கொடுத்து இருந்தார். எனினும், சிஎஸ்கே நிச்சயம் அவருக்காக ஏலத்தில் போட்டி போடும்.
அடுத்து தென்னாப்பிரிக்க அணியின் முக்கிய வீரரான எய்டன் மார்கிரமை வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முயற்சி செய்ய உள்ளது. அவர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக 2023ல் செயல்பட்டார். எனினும், 2024 ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
அதேசமயம் தென்னாப்பிரிக்க டி20 லீக்கில் இடம் பெற்றுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சகோதர அணியான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு 2023 மற்றும் 2024 தென்னாப்பிரிக்கா டி20 கோப்பையை அவர் வென்று கொடுத்து இருக்கிறார். எனினும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இந்த முறை அவரை தக்க வைக்குமா அல்லது விடுவிக்குமா என்ற சந்தேகம் உள்ளது.
எய்டன் மார்கிரம் ஏலத்தில் பங்கேற்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை வாங்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதிரடியாக ஆடக்கூடியவர் என்பதோடு பகுதி நேரமாக சுழற் பந்து வீசுவதிலும் சிஎஸ்கே அணிக்கு உதவுவார். இதுபோன்ற பகுதிநேர பந்து வீச்சாளர்களாக இருக்கும் பேட்ஸ்மேன் சிஎஸ்கே அணிக்கு இப்போது அவசியமாக உள்ளது.
அடுத்து தென்னாப்பிரிக்க அணியின் சிறந்த வேகப் பந்துவீச்சாளரான காகிசோ ரபாடாவை சிஎஸ்கே அணி ஏலத்தில் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. அவர் இப்போது தனது கேரியரின் உச்சத்தில் இருக்கிறார். அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலும் விக்கெட் வேட்டையாடி வருகிறார். டெஸ்ட் போட்டிகளில் மிகக் குறைந்த பந்துகளில் 300 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்து இருக்கிறார்.
அவர் ஏலத்தில் விடுவிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. சிஎஸ்கே அணிக்கு பவர் பிளேவிலும், கடைசி ஓவர்களிலும் துல்லியமாக பந்து வீசவும், ரன்களை கட்டுப்படுத்தவும் ஒரு நல்ல வேகப் பந்துவீச்சாளர் தேவை. அந்த இடத்தை காகிசோ ரபாடா நிரப்ப அதிக வாய்ப்பு உள்ளது. மதிஷா பதிரானா மற்றும் ரபாடா இணைந்து பந்து வீசினால் அது எதிரணியை திணற வைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.