சென்னை: 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டு வைத்திருக்கும் திட்டத்தை பஞ்சாப் கிங்ஸ் அணி முறியடிக்க உள்ளது. குறிப்பாக இந்திய அணியில் தோனியின் விக்கெட் கீப்பிங் வாரிசாக பார்க்கப்படும் வீரர் ஒருவருக்கு சிஎஸ்கே அணி ஏலத்தில் குறி வைத்து உள்ளது.
ஆனால், அந்த வீரரை பஞ்சாப் கிங்ஸ் அணி தங்கள் அணியில் இடம் பெறச் செய்து, அவருக்கு கேப்டன் பதவியும் அளிக்க திட்டமிட்டு உள்ளது. இதன் பின்னணியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அந்த வீரர் ரிஷப் பண்ட் தான்.

2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி இடம் பெற்று இருக்கிறார். அவர் சர்வதேச போட்டிகளில் ஆடாத வீரர் என்ற விதியின் கீழ் இடம் பெற்று நான்கு கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் தக்கவைக்கப்பட்டு இருக்கிறார் தோனி. அவர் 2025 ஐபிஎல் தொடரில் விளையாடுவது உறுதியாகி இருக்கிறது. ஆனால், அவரால் முழு நேர விக்கெட் கீப்பராக செயல்பட முடியுமா? என்ற கேள்வி உள்ளது.
தோனிக்கு கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களாக முழங்காலில் வலி இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, அவர் விக்கெட் கீப்பிங் செய்வது சந்தேகம்தான். அவர் இம்பாக்ட் வீரராக பேட்டிங்கில் மட்டுமே இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனிக்கு அடுத்து மாற்று விக்கெட் கீப்பரை தேடி வருகிறது.
இந்திய அணியில் தோனிக்கு பின் விக்கெட் கீப்பராக இடம் பெற்ற ரிஷப் பண்ட் சிறப்பாகவே ஆடி வருகிறார். எனவே, அதே போல சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் ரிஷப் பண்ட்டை தோனியின் விக்கெட் கீப்பிங் இடத்தை நிரப்புவதற்கு பயன்படுத்தலாம் என சிஎஸ்கே நிர்வாகம் நினைக்கிறது.
ரிஷப் பண்ட் டெல்லி கேபிடல்ஸ் அணியில் கேப்டனாக இருந்தபோது அதே அணியில் பயிற்சியாளராக இருந்த ரிக்கி பாண்டிங் வேறு ஒரு திட்டத்தை வைத்துள்ளார். டெல்லி கேபிடல்ஸ் அணியில் பாண்டிங் பயிற்சியாளராகவும், ரிஷப் பண்ட் கேப்டன் ஆகவும் சிறப்பாக செயல்பட்டனர். எனினும், அவர்கள் இருவரையும் டெல்லி அணி நிர்வாகம் நீக்கி உள்ளது.
ரிக்கி பாண்டிங் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். அவர் பண்ட்டுக்கு குறி வைத்து இருக்கிறார். தற்போது 2025 ஐபிஎல் மெகா ஏலத்துக்கு மிக அதிக தொகையுடன் செல்லும் ஒரே அணி பஞ்சாப் கிங்ஸ் மட்டுமே. அந்த அணியிடம் வீரர்களை வாங்குவதற்கு 110.5 கோடி ரூபாய் உள்ளது.
அதே சமயம் சிஎஸ்கே அணியிடம் ஏலத்தில் வீரர்களை வாங்க 55 கோடி ரூபாய் மட்டுமே கையிருப்பில் உள்ளது. எனவே, ஏலத்தில் ரிஷப் பண்ட் பெயர் அறிவிக்கப்பட்டவுடன் பஞ்சாப் கிங்ஸ் அணி 25 கோடி ரூபாய் வரை ஏலம் கேட்க வாய்ப்பு உள்ளது. அந்த அளவுக்கு ஒரு வீரருக்கு ஏலத்தில் விலை கேட்க சிஎஸ்கே அணியால் முடியாது.
சிஎஸ்கே அணியிடம் 55 கோடி மட்டுமே உள்ளது. அதை வைத்து சிஎஸ்கே அணி 15 முதல் 20 வீரர்களை வாங்க வேண்டும். எனவே, ரிஷப் பண்ட்டை சிஎஸ்கே அணி வாங்குவதற்கு ரிக்கி பாண்டிங் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணி பெரிய முட்டுக்கட்டையாக இருக்கும்.