சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2025 ஐபிஎல் தொடரில் நான்கு முக்கிய வீரர்களை மட்டுமே தக்க வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் அதிர வைக்கும் விஷயம் ஒன்றும் உள்ளது. அந்த நான்கு வீரர்களில் தோனியின் பெயர் இல்லை. இதன் பின்னால் ஒரு நெகிழ வைக்கும் காரணமும் உள்ளது.
2025 ஐபிஎல் தொடருக்கு முன் மெகா ஏலம் நடைபெற உள்ளது. அதற்கு முன் ஒவ்வொரு அணியும் நான்கு வீரர்களை மட்டுமே தக்க வைக்க முடியும். எனினும், சில ஐபிஎல் அணிகள் கூடுதல் வீரர்களை தக்க வைக்க அனுமதிக்க வேண்டும் என பிசிசியிடம் கோரிக்கை வைத்துள்ளன. பிசிசிஐ ஐந்து வீரர்கள் வரை தக்க வைக்க அனுமதி அளிக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஒரு வேளை ஒரு அணி நான்கு வீரர்களை மட்டுமே தக்க வைக்க முடியும் என பிசிசிஐ அறிவித்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே மற்றும் மதிஷா பதிரானா ஆகிய நான்கு வீரர்களை மட்டுமே அந்த அணி தக்க வைக்கும். தோனியை அந்த அணி தக்க வைக்காது என கூறப்படுகிறது.
தோனி கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தனது கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அவர் 2025 ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா? என்ற கேள்வி அனைவருக்கும் உள்ளது. அதற்கான பதிலை அவர் சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் கூறி இருக்கிறார். அதில் ஐந்து வீரர்களை தக்க வைக்க அனுமதி கிடைத்தால் மட்டுமே தன்னை சிஎஸ்கே அணியில் தக்க வைக்குமாறு தோனி கூறி இருக்கிறார்.
ஏனெனில், 2025 ஐபிஎல் தொடரின் போது தனது 43 வயதில் அவரால் முழு வீச்சில் பேட்டிங் செய்ய முடியுமா? என்பது கேள்விக் குறிதான். அதே சமயம், திறமையான டி20 வீரர்களாக இருக்கும் ருதுராஜ் கெய்க்வாட், சிவம் துபே மற்றும் பதிரானா ஆகியோருடன் அனுபவம் வாய்ந்த ஆல் - ரவுண்டர் ஜடேஜாவை தக்க வைத்தால் அது சிஎஸ்கே அணிக்கு பலன் அளிக்கும். தனக்காக இவர்களில் ஒருவரை தக்க வைக்காமல் அணியில் இருந்து நீக்கினால் அது பெரிய இழப்பு என்பதால் தோனி இந்த நெகிழ வைக்கும் முடிவை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.
ஒரு வேளை ஐந்து வீரர்களை தக்க வைக்க பிசிசிஐ அனுமதி அளித்தால் தோனி 2025 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் பங்கேற்பார். அப்போதும் கூட அவர் இம்பாக்ட் வீரராக மட்டுமே இடம் பெறுவார் என கூறப்படுகிறது.