சென்னை: 2025 ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆல் - ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரை வாங்க திட்டமிட்டு உள்ளது. ஆனால், சிஎஸ்கே அணிக்கு இருக்கும் ஒரு சிக்கல் காரணமாக வாஷிங்டன் சுந்தரை வாங்க முடியாது என விமர்சகர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உட்பட 10 ஐபிஎல் அணிகளும் பங்கேற்க உள்ளன. இந்த ஏலத்திற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்து வீரர்களை மட்டுமே தக்க வைத்துள்ளது. அவர்களுக்கு சம்பளமாக 65 கோடி செலவிட்டு இருக்கும் நிலையில், மீதம் 55 கோடி மட்டுமே கையிருப்பில் உள்ளது.

ஒரு அணி வீரர்கள் சம்பளத்திற்காக 120 கோடி ரூபாயை மட்டுமே அதிகபட்சமாக செலவு செய்ய முடியும் என்பதால் இந்த நிலை ஏற்பட்டு இருக்கிறது. 55 கோடியை வைத்துக்கொண்டு சிஎஸ்கே அணி குறைந்தபட்சம் 13 வீரர்களை ஏலத்தில் வாங்க வேண்டிய கட்டாயம் உள்ளது. தற்போது சிஎஸ்கே அணிக்கு வாஷிங்டன் சுந்தர் போன்ற ஒரு சுழற் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் அவசிய தேவையாக உள்ளது.
வாஷிங்டன் சுந்தர் சமீப காலமாக நல்ல ஃபார்மில் இருக்கிறார் என்பதோடு, பவர்பிளே ஓவர்களிலும் கட்டுக் கோப்பாக பந்து வீசும் திறன் கொண்டவர். அதனால், அவரை வாங்க வேண்டும் என சிஎஸ்கே நினைக்கிறது. அதேபோல விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஒருவரும் சிஎஸ்கே அணிக்கு தேவையாக உள்ளது.
தோனி இந்த ஆண்டு இம்பாக்ட் வீரராக பேட்டிங்கின் போது மட்டுமே விளையாடுவார் என்பதால் ஒரு தேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனையும் ஏலத்தில் வாங்க வேண்டிய அவசியம் உள்ளது. எனவே, சிஎஸ்கே அணி தனக்கு இருக்கும் பணத்தை வைத்து எந்த ஒரு வீரருக்கும் 10 கோடிக்கும் மேல் சம்பளம் அளிக்க முடியாது.
ஏலத்தில் 10 கோடிக்கு மேல் எந்த ஒரு வீரருக்கும் போட்டி போட முடியாத நிலையில் உள்ளது சிஎஸ்கே அணி. வாஷிங்டன் சுந்தருக்கு ஐபிஎல் அணிகள் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது. அவர் சமீபத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டார். எனவே, வாஷிங்டன் சுந்தருக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் போட்டி போடும்.
எனவே, அவரது ஏலத்தொகை நிச்சயமாக 12 கோடி முதல் 15 கோடி வரை செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வளவு தொகையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலத்தில் ஒரு வீரருக்காக மட்டுமே செலவிட முடியாது என்பதால் வாஷிங்டன் சுந்தரை வாங்குவது முடியாத காரியமாக பார்க்கப்படுகிறது.