சென்னை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ரசிகர்கள் பலரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீது பெரும் எதிர்பார்ப்பை வைத்திருந்து தற்போது ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள். சிஎஸ்கே அணி விளையாடிய 3 போட்டிகளில் 2 போட்டிகளில் தோல்வியை தழுவி விட்டது.
மேலும் முன்னாள் கேப்டன் தோனியும் பேட்டிங் வரிசையில் கீழே இறங்குவது ரசிகர்களிடையே எரிச்சலை ஏற்படுத்திருக்கிறது. தோனி அதிரடியாக விளையாடினாலும், அவரால் கடைசி சில ஓவர்கள் மட்டும்தான் பேட்டிங் செய்ய முடியும்.

இதற்கு அவருடைய உடல் தகுதி தான் காரணம் என்று பயிற்சியாளர் பிளம்மிங் கூறியிருக்கிறார். இதனால் பலரும் தோனி அணியை விட்டு செல்ல வேண்டும் என்று வலியுறுத்த தொடங்கி விட்டார்கள். தோனி இன்னும் ஒரு முறை விளையாட வேண்டும் என்று சொன்ன அதே ரசிகர்களே, தற்போது தோனி சென்றால் போதும் என்ற நிலைக்கு வந்து விட்டார்கள்.
இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான் தோனியை புகழ்ந்து பாராட்டி இருக்கிறார். மேலும் தோனி ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாட வேண்டும் என்று அவர் வலியுறுத்தி இருக்கிறார். இது குறித்து பேசிய அவர், ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவதன் மூலம் பல ரசிகர்களை அவர் ஈர்த்து வருகிறார்.
இதன் மூலம் ஐபிஎல் தொடரின் மதிப்பு அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இதனால் தோனி அவரால் முடியும் வரை தொடர்ந்து ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும். சிஎஸ்கே அணிக்காக பல கோப்பைகளை அவர் வாங்கிக் கொடுத்திருக்கின்றார். எனவே தோனி தற்போது ஐபிஎல் தொடரை விட்டு விலகி சென்று விட்டால் பல ரசிகர்கள் ஐபிஎல் தொடரை பார்ப்பதையே நிறுத்தி விடுவார்கள்.
இதன் மூலம் ஐபிஎல் தொடரின் மதிப்பு குறைந்து விடும். தோனி இப்போது வரை களத்தில் மிகச்சிறந்த விக்கெட் கீப்பராக இருக்கின்றார். இன்னும் களத்தில் விழிப்புடன் அவர் இருக்கின்றார். மக்கள் அனைவரும் தோனியை பார்க்க விரும்புகிறார்கள். இதனால் தோனி பேட்டிங் வரிசையில் எந்த இடத்தில் களமிறங்குகிறார் என்பதெல்லாம் எனக்கு ஒரு பொருட்டே கிடையாது. அவர் 11 வது வீரராக கூட வந்து விளையாடட்டும். தோனி ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடினால் அது எனக்கு போதும் என்று கிறிஸ் கெயில் கூறியுள்ளார்.