சென்னை: இனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பெயரை கோயம்புத்தூர் சூப்பர் கிங்ஸ் என மாற்றி விடுவார்களோ என சொல்லும் அளவுக்கு ஒரு விஷயம் நடக்க உள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சென்னையில் இருக்கும் ரசிகர்களை விட கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக ரசிகர்கள் இருப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.
அப்படி ஒரு அறிவிப்பை தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டு இருக்கிறது. உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை கோவையில் உருவாக்க உள்ளதாக தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இன்னும் ஓராண்டில் இந்த மைதானத்தின் கட்டுமானப் பணிகள் துவங்கும் எனவும் கூறப்படுகிறது.

தற்போது இந்தியா மட்டுமின்றி உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக இருப்பது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானம் ஆகும். அந்த மைதானத்தில் ஒரே நேரத்தில் 1,32,000 ரசிகர்கள் அமர முடியும். அந்த அளவுக்கு அந்த மைதானம் மிகப்பெரிய அளவில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
தற்போது கோவையில் 198 ஏக்கர் பரப்பளவில் அதைவிட பெரிய மைதானத்தை கட்டமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக கோவையில் சிறைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 200 ஏக்கர் நிலத்தில் இருந்து 198 ஏக்கரை கைப்பற்ற உள்ளது. அதில் இந்த புதிய கிரிக்கெட் மைதானம் அமைய உள்ளது.
அகமதாபாத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தை விட அதிக எண்ணிக்கையில் இருக்கைகள் அமையும் பட்சத்தில் சுமார் 1,50,000 ரசிகர்கள் ஒரே நேரத்தில் போட்டிகளை பார்க்க முடியும் என எதிர்பார்க்கலாம். தற்போது உள்ள நிலையில் இந்தியாவில் அதிக கிரிக்கெட் மைதானங்கள் உள்ளன.
அனைத்து கிரிக்கெட் மைதானங்களிலும் சர்வதேச போட்டிகள் நடத்தப்படுவதில்லை. அந்த வகையில் பார்த்தால் இந்த புதிய கிரிக்கெட் மைதானம் அமைந்தாலும் அதில் சர்வதேச போட்டிகள் அதிக அளவில் நடத்தப்படுமா என்ற சந்தேகம் உள்ளது. ஆனால், ஐபிஎல் போட்டிகள் இங்கு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் என்பதில் சந்தேகம் இல்லை.
தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதன் போட்டிகளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்தி வருகிறது. ஒரு ஐபிஎல் அணிக்கு டிக்கெட் வருவாய் மூலம் மிகப்பெரிய லாபம் கிடைக்கும். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 32,000 ரசிகர்கள் மட்டுமே ஒரே நேரத்தில் போட்டிகளை காண முடியும். ஆனால், கோவையில் மைதானம் அமைந்தால் அங்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான டிக்கெட்களை விற்று பெரும் லாபம் ஈட்ட முடியும்.
அதன் மூலம் டிக்கெட் வருவாய் அதிகரிக்கும். மேலும், சிஎஸ்கே அணிக்கான ரசிகர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். அதை நிச்சயம் சிஎஸ்கே அணி பயன்படுத்திக் கொள்ள நினைக்கும். அதன் அடிப்படையில் இனி சென்னையை விட கோவைக்கு சிஎஸ்கே அணி அதிக முக்கியத்துவம் அளிக்கவும் வாய்ப்புள்ளது. அதனாலேயே, இனி சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற பெயரை கோயம்புத்தூர் சூப்பர் கிங்ஸ் அல்லது கோவை சூப்பர் கிங்ஸ் என மாற்றிக் கொள்ளலாம்.
ஆனால், இது எல்லாமே கோவையில் உலகின் பெரிய கிரிக்கெட் மைதானம் உருவானால் மட்டுமே சாத்தியம்! கடந்த 15 ஆண்டுகளில் திமுக மற்றும் அதிமுக ஆட்சி காலங்களில் கோவையில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என பலமுறை கூறப்பட்டும் அது நிறைவேற்றப்படவில்லை. இந்த முறையாவது அது நிறைவேற வேண்டும் என்பதே கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது,