மும்பை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் தொடங்குவதற்கு முன்பு மெகா ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடத்தப்பட உள்ளது. இதில் ஒவ்வொரு அணியும் பல புது வீரர்களை தேர்வு செய்ய வாய்ப்பு கிடைக்கும். அது மட்டும் அல்லாமல் மெகா ஏலத்திற்கு முன்பு சில வீரர்களை மட்டுமே தக்க வைக்க பிசிசிஐ அனுமதி அளிக்கும்.
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி இடம் பெறுவாரா இல்லையா என்பது குறித்து தகவல் இன்னும் வெளியாகவில்லை. மேலும் தோனிக்கு வயதாகி விட்டதால் மாற்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை தேடும் பணியில் சிஎஸ்கே இருக்கிறது.

இதனால் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் சிஎஸ்கே அணிக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரிஷப் பண்ட் எங்கேயும் செல்ல மாட்டார் என்றும் டெல்லி அணியில் தொடர்வார் என்றும் அந்த அணி நிர்வாகம் அண்மையில் அறிவித்தது. இதனால் பண்ட் சிஎஸ்கேவுக்கு வருவது பகல் கனவு போல் மாறிவிட்டது.இந்த நிலையில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக 32 வயதான கே எல் ராகுலை தேர்வு செய்ய சிஎஸ்கே ஆர்வமாக இருக்கிறது.
அனுபவம் வாய்ந்த அதிரடி பேட்ஸ்மேனாக இருக்கும் கே எல் ராகுல் ஐபிஎல் தொடரில் மொத்தமாக 132 போட்டியில் விளையாடி 4683 ரன்கள் அடித்திருக்கிறார். அவருடைய சராசரி 45 என்று அளவில் இருக்கிறது. ஸ்ட்ரைக் ரேட் 134 என்ற நிலையில் உள்ளது. கே எல் ராகுல் அணிக்குள் வந்தால் சிஎஸ்கே வில் பல பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.
தொடக்க வீரராகவும் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆகவும் ராகுலால் செயல்பட முடியும்.
ராகுல் லக்னோ அணி உரிமையாளருடன் கருத்து வேறுபாட்டில் இருப்பதால் அவர் ஏலத்தில் பங்கேற்க முடிவு செய்துள்ள நிலையில் அவரை சிஎஸ்கே மேலே சொன்ன காரணங்களுக்காக தட்டி தூக்க முடிவு செய்திருக்கிறது. இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் கனவுக்கு வேட்டு வைக்கும் விதமாக ஆர்சிபி திட்டம் திட்டி வருகிறது.
ஆர் சி பி அணியின் கேப்டனாக இருக்கும் டுபிளசிஸ்க்கு வயது 40 தாண்டி விட்டது. இதனால் அவர் அடுத்த சீசனில் விளையாடுவது கேள்விக்குறியாக இருக்கிறது.
இதனால் லக்னோ அணியின் கேப்டனாக இருக்கும் கே எல் ராகுலை தங்கள் அணிக்கு அழைத்து வந்து கேப்டனாக விளையாட வைக்கலாம் என்று ஆர் சி பி யோசித்து வருகிறது. கே.எல் ராகுலின் சொந்த ஊர் பெங்களூர் என்பதால் அவர் ஆர்சிபி அணிக்கு விளையாடுவது கச்சிதமாக பொருந்தும். மேலும் அவர் ஏற்கனவே ஆர்சிபி அணியில் விளையாடிய அனுபவம் உடையவர். இதனால் கே எல் ராகுல் வேண்டும் என சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி கடும் போட்டியில் ஈடுபட வாய்ப்பு இருக்கிறது.