மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் பல அணிகள் பல யுக்திகளை பயன்படுத்தி விளையாடி வருகிறது. சிறுவயதில் நாம் பார்த்த கிரிக்கெட்டில் வீரர்கள் யாரேனும் காயம் அடைந்தால் ரிட்டயர்ட் அவுட்டாகி பார்த்திருப்போம். ஆனால் தற்போது வீரர்கள் காயம் ஏதும் அடையாத நிலையில் தங்களால் பந்தை அடிக்க முடியவில்லை என்று கூறி ரிட்டையர்டு அவுட் ஆகும் கலாச்சாரம் நடைபெற்று வருகிறது.
இதனை முதன் முதலில் ராஜஸ்தான் அணியில் இருந்த போது அஸ்வின் செய்தார். அண்மையில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய போட்டியில் திலக் வர்மா ரிட்டயர்ட் அவுட் ஆகி வெளியேறினார். இது திலக் வர்மாவை அவமானப்படுத்தும் விதமாக இருந்ததாக பலரும் குற்றச்சாட்டி இருந்தனர்.

எனினும் இது யுக்திகளின் ஒரு பகுதி என மும்பை அணி விளக்கம் அளித்திருந்தது. இந்த சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் அதே போல் ஒரு தவறை நேற்றைய பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் செய்தது. அதில் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு 13 பந்தில் 49 ரன்கள் தேவைப்பட்டது. பொதுவாக இப்படி இருக்கும் கட்டத்தில் இன்னிங்ஸ் ஆரம்பத்தில் இருந்து விளையாடி வரும் வீரர் தான் பந்தை நன்கு எதிர்கொண்ட உத்வேகத்துடன் இருப்பார்கள்.
இதனால் அவர்கள் தான் கடைசி வரை நின்று போட்டியை வெற்றி பெற வைப்பார்கள்.கான்வே 49 பந்துகளில் 69 ரன்கள் அடித்திருந்தார். 6 பவுண்டரி, இரண்டு சிக்ஸர் என 140 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார். இந்த சூழலில் கான்வே இறுதி கட்டத்தில் பெரிய சிக்சர் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென்று சிஎஸ்கே அணி அவரை ரிட்டயர்ட் அவுட் ஆகி வெளியே செல்ல வைத்தது.
அதன் பிறகு ஜடேஜா களத்திற்கு வந்தார். ஜடேஜாவும் பெரிய அளவு சாதிக்கவில்லை. ஐந்து பந்துகளை எதிர்கொண்டு ஒரு சிக்சர் உட்பட ஒன்பது ரன்கள் மட்டுமே சேர்த்தார். இதற்கு கான்வே கடைசி வரை களத்தில் நின்று இருக்கலாமே என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். எனினும் தோனி ரன்களை ஓடும் போது கான்வே கொஞ்சம் மெதுவாக ஓடியதாகவும், இதனால் தான் தோனி அவரை ரிட்டயர்ட் அவுட் ஆக்கிவிட்டு நன்றாக ஓடக்கூடிய ஜடேஜாவை வர வைத்ததாகவும் கூறப்படுகிறது.
எனினும் சிஎஸ்கே அணி செய்தது மிகப்பெரிய தவறுதான் என்று கிரிக்கெட் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.