லக்னோ: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து ஐந்து போட்டிகளில் தோல்வியை தழுவியதற்கு பேட்டிங் பந்துவீச்சு மட்டும் முக்கிய காரணம் அல்ல. பீல்டிங்கில் படுமோசமாக செயல்பட்டது தான். பல போட்டிகளில் கையில் வந்த கேட்சுகளை கூட சிஎஸ்கே அணி கோட்டை விட்டது.
இதன் காரணமாக அந்த வீரர் கூடுதலாக இருபது ரன்கள் அடித்து அதுவே சிஎஸ்கே அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்திருக்கிறது. ஒரு போட்டியில் வெல்ல வேண்டுமென்றால் கேட்ச்களை பிடிக்க வேண்டும் என்பது கிரிக்கெட்டின் விதி. இந்த நிலையில் சிஎஸ்கே அணி தொடர்ந்து மோசமாக செயல்பட்டது ரசிகர்களை வெறுப்படையச் செய்தது.

இந்த நிலையில் தோனி கேப்டனான பிறகாவது இது மாறுமா என எதிர்பார்த்த நிலையில் கடந்த கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் கூட சிஎஸ்கே வீரர்கள் கைக்கு வந்த கேட்சை தவறவிட்டனர். இது குறித்து கருத்து தெரிவித்திருந்த கேப்டன் தோனி, அடிப்படை விஷயங்களை சரியாக செய்தாலே வெற்றி கிடைக்கும். முதலில் கைக்கு வரும் கேட்சையாவது வீரர்கள் பிடிக்க வேண்டும்.
இதற்கு கடும் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி இருந்தார். இந்த நிலையில் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்த தொடரில் மிக சிறந்த கேட்ச் ஒன்றை சிஎஸ்கே வீரர் ராகுல் திருப்பாதி பிடித்திருப்பது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய லக்னோ அணியை குறைந்த இலக்கில் சுருட்ட வேண்டும் என்ற உத்வேகத்தில் சிஎஸ்கே அணி களம் இறங்கியது.
இதில் லக்னோ அணியின் அதிரடி வீரரான ஏய்டன் மார்க்கரம் அளித்த ஒரு பந்து 30 மீட்டர் சர்க்கிளை தாண்டி சென்றது. ஆனால் இதை யாருமே எதிர்பார்க்காத வகையில் ராகுல் திருப்பாதி ஓடி சென்று அபாரமாக கேட்ச் பிடித்து அசத்தினார். இதன் மூலம் அவர் ஆறு ரன்களில் ஆட்டமிழக்க சிஎஸ்கே அணி முதல் ஓவரிலே எதிரணியின் விக்கெட்டை கைப்பற்றியது.
இதன் மூலம் சிஎஸ்கே அணியின் பீல்டிங் கொஞ்சம் முன்னேறி இருப்பதாக கிரிக்கெட் வர்ணனையாளர்கள் பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள்.
மேலும் ராகுல் திருப்பாதி பேட்டிங்கில் தடுமாறி வரும் நிலையில், இந்த கேட்ச் அவருடைய உத்வேகத்தை அதிகரிக்கும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.