சிட்னி: சிஎஸ்கே அணியின் ஜாம்பவான் வீரரான தோனியின் கேப்டன்சி மற்றும் அவரின் நடவடிக்கை குறித்து அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி பேசியுள்ள வீடியோ ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது. தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோல்வியடைந்தாலும் கூட தோனி அமைதியாக இருப்பார் என்று கூறிய அவர், ஓய்வறையில் வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் கூட பேச மாட்டார் என்று கூறியுள்ளார்.
இன்னும் 2 மாதங்களில் நடக்கவுள்ள ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக நட்சத்திர வீரர் தோனி மீண்டும் மஞ்சள் ஜெர்சியில் களமிறங்கவுள்ளார். இம்முறை சிஎஸ்கே அணி மிகச்சிறப்பாக கட்டமைக்கப்பட்டுள்ள நிலையில், 6வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் இருக்கின்றன. இதனால் சிஎஸ்கே அணியின் ரசிகர்களும் உற்சாகமடைந்துள்ளனர்.

43 வயதிலும் சிஎஸ்கே அணிக்காக தோனி களமிறங்க உள்ளதால், இதுவே அவருக்கு கடைசி சீசனாக அமையும் என்று பார்க்கப்படுகிறது. இதற்காக ஃபிட்னஸில் தோனி தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். ஒருபுறம் உடற்பயிற்சி, இன்னொரு புறம் விளையாட்டு என்று பணியாற்றி ஃபிட்னஸ் உடன் இருப்பதாக கூறியுள்ளார். இதனிடையே தோனியின் கேப்டன்சி குறித்து பிக் பாஷ் தொடரின் போது மைக் ஹசி பேசியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் பிக் பாஷ் லீக் தொடரின் போது வர்ணனையில் தோனியின் கேப்டன்சி குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளரான மைக் ஹசி பேசுகையில், தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோல்வியடைந்தால் கூட தோனி ஒருபோதும் பதற்றத்தையோ, கோபத்தையோ வெளிக்காட்ட மாட்டார். அவர் வழக்கம் போல் அவருக்கு பிடித்த வீரர்கள், தேவையான வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் வாய்ப்பு அளிப்பார்.
வெற்றியோ, தோல்வியோ அவர் எப்போதும் அமைதியே கடைபிடிப்பார். ஓய்வறையில் கூட உணர்ச்சிப்பூர்வமாக பேசுவதோ, வீரர்களுக்கு எனர்ஜியை கொடுக்கும் வகையில் உரையாற்றுவதோ தோனியின் பாலிசி கிடையாது. அவர் எப்போதும் ஹோட்டல் அறையில் தனது வீரர்களுடன் அமர்ந்து சாப்பிட்டு கொண்டே பேசிக் கொண்டிருப்பார். அதுதான் தோனியின் ஸ்டைல். ஒவ்வொரு வீரருடனும் தனித்தனியாக ஆலோசிப்பார்.
https://x.com/BBL/status/1874997898838217159
அவருக்கு கிரிக்கெட்டை பற்றிய புரிதலோடு, வாழ்க்கையை பற்றிய புரிதலும் அதிகம் இருக்கிறது. சாமானிய மனிதர்களின் சிந்தனையுடன் ஒப்பிடும் போது தோனியின் சிந்தனையை அதிக வித்தியாசத்தை அளிக்கும். அவருடன் அமர்ந்து பேசுவது எனக்கும் பிடித்தமான விஷயம். அவர் எவ்வாறு சில சூழல்களை எதிர்கொள்கிறார் என்பதை அறிய விரும்புவேன். அவரிடம் கற்றுக் கொள்ள அதிகமுள்ளது என்று தெரிவித்துள்ளார்.