சென்னை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் மோசமான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. விளையாடிய 6 போட்டிகளில் ஐந்து போட்டிகளில் தோல்வியை தடவி இருப்பதால், சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவது என்பது கடினமாக மாறிவிட்டது.
இந்த நிலையில் சிஎஸ்கே அணி சரியாக விளையாடவில்லை என்றாலும், மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பும் என்று அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், எங்கள் அணியில் உத்வேகம் இல்லை என்பது உண்மை.

நாங்கள் தற்போது சரியாக விளையாடவில்லை. அதை நாங்கள் ஒப்புக் கொள்கின்றோம். எங்கள் மீது தவறு இருக்கிறது என்பதை கையை உயர்த்தி நாங்கள் ஆமோதிக்கின்றோம். இதனால் எங்களால் திரும்பி வெற்றி பாதைக்கு திரும்ப முடியாது என்றெல்லாம் கிடையாது. உடனடியாக அனைத்தையும் மாற்றி சரி செய்ய முடியாது என்றாலும் நாங்கள் தொடர்ந்து வெற்றி பெறுவதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.
நாங்கள் கடின உழைப்பை வெளிப்படுத்தி வருகின்றோம். எங்களுக்கு சாதகமாக உத்வேகத்தை மாற்றினால் எங்கள் அணி நிச்சயம் நம்பிக்கையை பெறும். இதன் மூலம் சில வெற்றிகளை நாங்கள் பெற்றால் மீண்டும் எங்கள் அணி வீரர்கள் நம்பிக்கையை பெறுவார்கள். உங்களால் ஐபிஎல் தொடர் குறித்து எதையும் சரியாக கணிக்க முடியாது.
நாங்கள் தற்போது புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தாலும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் இது நீண்ட நெடிய தொடர். எது வேண்டுமானாலும் நடக்கலாம். திடீரென்று அனைத்துமே தலைகீழ் மாறலாம். இதனால் எங்களால் பிளே ஆப்க்கு செல்ல முடியும் என்ற நம்பிக்கை இன்னும் இருக்கிறது என்று ஹசி கூறியுள்ளார்.
சிஎஸ்கே அணிக்கு இன்னும் 8 போட்டிகள் இருக்கிறது. இந்த எட்டு போட்டிகளில் ஐந்து போட்டிகள் சென்னைக்கு வெளியே தான் நடக்கின்றது. இந்த எட்டு போட்டிகளில் குறைந்தபட்சம் சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் பந்தயத்தில் இருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.