IPL 2025: ருதுராஜ், ரச்சின் அபார அரைசதம்.. மும்பை அணியை ஓடவிட்ட சிஎஸ்கே.. 12 ஆண்டுகளாக தொடரும் சோகம்
சென்னை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனை அடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி வீரர் ரோகித் சர்மா, கலீல் அகமது பந்துவீச்சில் டக் அவுட் ஆனார். இதேபோன்று ரியான் ரிக்கல்டன் 13 ரன்களிலும், வீல் ஜாக்ஸ் 11 ரன்களிலும் ஆட்டமிழக்க கேப்டன் சூரியகுமார் யாதவ் நிதானமாக விளையாடி 26 பந்துகளில் 29 ரன்கள் சேர்க்க ராபின் மின்ஸ் மூன்று ரன்களிலும் நமன் தீர் 17 ரன்களிலும் ஆட்டமிழக்க திலக் வர்மா மட்டும் தனி ஆளாக போராடி 25 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்தார்.

இறுதியில் மிட்செல் சாட்னர் 11 ரன்களும், தீபக்சாகர் 28 ரன்களும் எடுக்க மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. சிஎஸ்கே பந்துவீச்சு தரப்பில் நூர் அஹமத் நான்கு விக்கெட்டுகளையும் கலில் அகமத் மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார். இதனை அடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே அணி களம் இறங்கியது.
இம்பேக்ட் வீரராக கலீல் அகமதுக்கு பதில் ராகுல் திருப்பாதி களமிறங்கினார். எனினும் அவர் பேட்டிங்கில் இரண்டு ரன்கள் மட்டுமே சேர்த்தார். இதை அடுத்து, இரண்டாவது விக்கெட்டுக்கு ரச்சின் ரவீந்திரா ஜோடி சேர்ந்து அபாரமாக விளையாடியது.சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 6 பவுண்டரி, மூன்று சிக்ஸர் என பறக்க விட்டார்.
இதன் மூலம் 26 பந்துகளில் அவர் 53 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். இதன் பின்னர் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிவம் துபே ஒன்பது ரன்களிலும் தீபக் ஹூடா மூன்று ரன்களிலும், சாம் கரண் 4 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டும் ஆட்டத்திற்குள் வந்தது. எனினும் தொடக்க வீரரான ரச்சின் ரவீந்தரா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கடைசி வரை நின்று சிஎஸ்கே அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
45 பந்துகளை எதிர்கொண்ட அவர் 65 ரன்கள் சேர்த்தார். இதில் நான்கு சிக்சர், இரண்டு பவுண்டரி அடங்கும். இறுதியில் ஜடேஜா 17 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் சிஎஸ்கே அணி 19 புள்ளி ஒரு ஓவரில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது.
சிஎஸ்கே அணி விரைவாக இந்த ஸ்கோரை சேஸ் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வழக்கம்போல் கடைசி வரை போட்டியை இழுத்து சென்றனர். இதன் மூலம் 2012 ஆம் ஆண்டுக்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி தங்களுடைய முதல் போட்டியில் வென்றதே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications