லக்னோ: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து ஐந்து போட்டிகளில் தோல்வியை தழுவிய நிலையில் தற்போது லக்னோ அணிக்கு எதிராக வெற்றியை பெற்று மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பி இருக்கிறது.
இதன் மூலம் சிஎஸ்கே அணி நடப்பு சீசனில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்திருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றாலும் சிஎஸ்கே அணி புள்ளி பட்டியலில் பத்தாம் இடத்தை பிடித்திருக்கிறது. இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரரான சிவம் துபே இன்று பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

37 பந்துகளை எதிர்கொண்ட அவர் 43 ரன்கள் சேர்த்தார். இதில் மூன்று பவுண்டரிகளும், இரண்டு சிக்ஸர்களும் அடங்கும். சிவம் துபே நடு ஓவர்களில் மிகவும் நிதானமாக ஆடியது ரசிகர்களுடைய விமர்சனத்தை பெற்றாலும் கடைசியில் பௌண்டரி, சிக்ஸர் அடித்து அதற்கு ஈடு கட்டி விட்டார். இந்த நிலையில் தான் ஏன் இவ்வளவு மெதுவாக ஆடினேன் என்பது குறித்து சிவம் துபே தற்போது விளக்கம் அளித்திருக்கிறார்.
இந்த வெற்றி குறித்து பேசிய அவர், இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் முக்கியமானது. தொடர்ந்து ஐந்து போட்டிகளில் நாங்கள் தோல்வியை தழுவினோம். இது எங்கள் சி எஸ் கே வே கிடையாது. இன்று எங்கள் அணியின் பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். நான் இன்று பேட்டிங் செய்யும்போது கடைசி வரை களத்தில் நின்று விளையாட வேண்டும் என்று நினைத்தேன்.
போட்டியை நாம் நின்று முடிக்க வேண்டும் என்று எண்ணி தான் நான் என்னுடைய ஆட்டத்தை கட்டமைப்பேன். இன்றைய ஆட்டத்தில் கடைசி வரை கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தேன். விஜய் சங்கர், ஜடேஜா ஆகியோர் ஆட்டம் இழந்தவுடன் நாம் பொறுமையாக விளையாடி கடைசி வரை விளையாட வேண்டும் என்ற மன உத்வேகத்தை கொண்டு வந்தேன்.
எப்போதுமே சூழலுக்கு ஏற்ற வகையில் விளையாட வேண்டும். இதனால் தான் நான் இன்றைய ஆட்டத்தில் அதிரடியாக ஆடாமல் கடைசிவரை போட்டியை கொண்டு செல்வோம் என்பதற்காக மெதுவாக விளையாடினேன். லக்னோ பவுலர்களும் தங்களுடைய திட்டத்தை சிறப்பாக களத்தில் செயல்படுத்தினார்கள். அதனால் தான் நான் பந்தை அடித்து ஆட முயற்சி செய்யவே இல்லை. மேலும் தோனி அதிரடியாக ஆடிய உடன் என்னுடைய நெருக்கடி அனைத்தும் குறைந்தது. நான் கொஞ்சம் நிம்மதி அடைந்தேன். இன்றைய ஆட்டத்தில் எங்களுக்கு நிறைய நல்ல விஷயங்கள் நடந்திருக்கிறது. இதனை அடுத்த போட்டிக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று சிவம் துபே தெரிவித்துள்ளார்.