சென்னை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய 6வது லீக் ஆட்டத்தில் இன்று நடப்பு சாம்பியன் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் இருந்து சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆரவாரம் ஏற்பட்டு இருக்கிறது. எனினும் கேப்டன் ருதுராஜ் விலகி இருப்பது சிஎஸ்கே அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக பல ஆண்டுகளாக விளங்கி வந்தவர் பிராவோ.

சிஎஸ்கே அணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் பந்துவீச்சு பயிற்சியாளராக அணியில் தொடர்ந்தார். இந்த நிலையில் கொல்கத்தா அணி அழைத்ததாக கூறி சிஎஸ்கே அணியிலிருந்து விடை பெற்று கொல்கத்தா அணியின் பவுலிங் பயிற்சியாளராக சேர்ந்தார். இது சிஎஸ்கே ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது. சிஎஸ்கே அணியின் தூண்களில் ஒருவராக இருந்த பிராவோ, ஏன் விலகினார் என்று பல கேள்விகளும் எழுந்தது.
இதனிடையே, சென்னை கொல்கத்தா அணிகள் இன்று சேப்பாக்கத்தில் மோத உள்ள நிலையில் இரு அணிகளும் வலைப்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாமுக்கு பிராவோ வந்தார். அந்த சூழலில் தோனி வலைப்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது பிராவோ வருவதை பார்த்துவிட்டு துரோகி வந்துவிட்டார் பாருங்க என்று நக்கலாக கூறினார்.
இதனை கேட்ட பிராவோ சிரித்துக்கொண்டு முதலில் ஜடேஜாவை கட்டி அணைத்து தன்னுடைய பாசத்தை வெளிப்படுத்தினார். அதன் பின் தோனிக்கு கை குலுக்கி விட்டு அவருக்கும் வாழ்த்து தெரிவித்தார். இதன் பிறகு சிஎஸ்கே வீரர்கள் ஒவ்வொருவரும் பிராவோவை வரவேற்றனர். சி எஸ் கே அணியில் இருந்த பிராவோ கொல்கத்தாவுக்கு சென்றதை குறிப்பிட்டு கிண்டல் செய்யும் விதமாகத்தான் தோனி பிராவோவை துரோகி என்று அழைத்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.