கொல்கத்தா: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய மூன்றாவது வெற்றியை பதிவு செய்திருக்கிறது. கொல்கத்தா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணி 179 ரன்கள் எடுக்க கடைசி ஓவரில் இந்த ஸ்கோரை இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது.
குறிப்பாக தோனி கடைசியில் ஒரு சிக்சர் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். இந்த நிலையில் வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள தோனி, இந்த தொடரில் நாங்கள் வெற்றி பெற்ற மூன்றாவது போட்டி இதுதான். ஒருவழியாக போட்டியின் முடிவில் வெற்றி பெற்ற அணியாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த தொடரில் பல விஷயங்கள் எங்களுக்கு சாதகமாக நடக்கவில்லை. எனவே நிதர்சனமான விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். எந்த விஷயம் தவறாக போயிருக்கிறது என்பதை கண்காணித்து அதற்கான தீர்வை கண்டுபிடிக்க வேண்டும். தற்போது எங்களது அணியில் 25 வீரர்கள் இருக்கிறார்கள்.
அதில் எந்த வீரர்களை எந்த இடத்தில் நிரப்புவது என்பது குறித்து நாங்கள் கவனம் செலுத்துகின்றோம். அடுத்த சீசனுக்கான விடையை தற்போது இருந்து நாங்கள் தேட ஆரம்பித்து விட்டோம். குறிப்பாக பேட்டிங்கில் எந்த வரிசையில் எந்த வீரர் சரியான இடத்தில் இருப்பார். எந்த பவுலர் சரியாக இருப்பார் என்பது குறித்து எல்லாம் நாங்கள் பார்த்து வருகிறோம். சில சமயம் நாம் ரன்களை எடுக்காமல் ஆட்டம் இழந்து விடலாம்.
ஆனால் உங்களால் ஆட முடியும் என்று நினைக்கும் ஷாட்டுகளை நீங்கள் கண்டிப்பாக ஆட வேண்டும். இந்த வீரர்களை எல்லாம் வலைப்பயிற்சியிலும் இல்லை. பயிற்சி ஆட்டத்திலோ விளையாட வைத்து வாய்ப்பு தருவதை விட உண்மையான போட்டிகளில் அவர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பதை பார்க்க நாங்கள் நினைத்தோம்.
நாங்கள் வீரர்களின் கிரிக்கெட் யுக்திகள் சரியாக இருக்கிறதா என்று பார்க்காமல் வீரர்களின் மன உத்வேகம் எந்த அளவுக்கு இருக்கிறது. போட்டி தொடர்பான விழிப்புணர்வு எப்படி இருக்கிறது என்பதை கண்டறிய விரும்புகின்றோம். இன்றைய ஆட்டத்தில் பிரவீஸ் அபாரமாக விளையாடினார். அவருடைய அதிரடி ஆட்டத்தின் மூலம் நாங்கள் இறுதியில் கொஞ்சம் நெருக்கடி இல்லாமல் விளையாடினோம்.
சிவம் துபே பொறுப்பான முறையில் இன்னிங்சை கட்டமைத்து விளையாடினார். தற்போது எனக்கு 43 வயது ஆகிவிட்டது. நான் பல ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி விட்டேன். ரசிகர்களுக்கு இதுதான் என்னுடைய கடைசி சீசனா என்று தெரியாது. நான் வருடத்தில் வெறும் இரண்டு மாதங்கள் தான் விளையாடுகின்றேன். தற்போது இந்த ஐபிஎல் சீசன் முடிவடைந்த உடன் அடுத்த ஆறு முதல் எட்டு மாதம் வரை என்னுடைய உடல் எந்த அளவுக்கு இருக்கிறது. என்னுடைய உடல் தகுதி எப்படி இருக்கிறது என்பதை பார்த்து தான் முடிவு செய்ய வேண்டும். இதனால் இப்போது முடிவு செய்ய வேறு எதுவும் இல்லை என்று தோனி கூறியுள்ளார்.