சென்னை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து ஐந்து போட்டிகளில் தோல்வியை தழுவி புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது. சிஎஸ்கே அணி சேப்பாக்கம் வரலாற்றில் இன்று குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. 20 ஓவர் முடிவில் சிஎஸ்கே அணி 9 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதனை கொல்கத்தா அணி 10 புள்ளி ஒரு ஓவரில் எல்லாம் எட்டி அசத்தியது. இந்த நிலையில் தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள கேப்டன் தோனி இன்று மட்டுமல்ல பல இரவுகள் இப்படித்தான் எங்களுக்கு சாதகமாக அமையாமல் போய்விடுகிறது.

நாங்கள் என்ன தவறு செய்கிறோம் என்பதை முதலில் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். நிச்சயமாக சவால்கள் இருக்கின்றது. அதனை எப்படி எதிர்கொள்வது என்பதை கண்டுபிடிக்க வேண்டும். நாங்கள் இன்று பெரிய ஸ்கோர் எதுவும் அடிக்கவில்லை. சேப்பாக்கம் மைதானத்தில் பந்து நின்று வந்ததால் பேட்டர்ஸ் தடுமாறினார்கள்.
ஆனால் இன்று ஆரம்பத்திலே அதேபோல் பந்து நின்று வந்தது எதிரணியில் தலைசிறந்த சுழற் பந்துவீச்சாளர்கள் இருக்கும்போது நிச்சயம் பேட்டர்ஸ்க்கு கடும் நெருக்கடியாக தான் இருக்கும். எங்களுக்கு தேவையான பார்ட்னர்ஷிப்பை நாங்கள் அமைக்கவில்லை. பவர் பிளேவில் நாங்கள் சரியாக விளையாடவில்லை.
ஆனால் இன்று ஆடுகளம் நெருக்கடியை கொடுத்ததையும் கவனிக்க வேண்டும். இரண்டு போட்டிகளில் நல்ல சாதகமான ஆடுகளத்தில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறோம் என்பதையும் கவனிக்க வேண்டும். மற்ற அணிகள் அதிரடியாக விளையாடுகிறார்கள் என நாமும் அதை போல் விளையாட வேண்டும் என்று அவசியம் இல்லை.
நமது பலம் என்ன என்பதை பார்த்து விளையாட வேண்டும். எங்கள் அணியில் தலைசிறந்த தொடக்க வீரர்கள் இருக்கிறார்கள். எனினும் ரன் பெரியதாக சேர்க்கவில்லையே என்று தேவையில்லாத ஷாட்களை ஆடி விக்கெட்டுகளை இழந்து விடக்கூடாது. ஒரு சில பௌண்டரிகளை அடித்தாலே நமக்கு தேவையான ஸ்கோர் வந்துவிடும். பவர் பிளேவில் 62 ரன்கள் அடிக்க வேண்டும் என்று நினைத்து ஆடக்கூடாது. ஏனென்றால் பவர் பிளேவில் விக்கெட்டுகளை அதிக அளவு இழந்துவிட்டால் பின்னர் நடு வரிசை வீரர்களுக்கு அது கடினமாக மாறிவிடும். இதன் மூலம் பின்வரிசை வீரர்களால் பெரிய சாட் ஆட முடியாது என்று கேப்டன் தோனி கூறியுள்ளார்.