லக்னோ: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய இரண்டாவது வெற்றியை பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகளில் தோல்வியை தழுவிய சிஎஸ்கே அணி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பி இருக்கிறது. அபாரமாக விளையாடிய சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி 11 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்தார்.
இதன் மூலம் தோனிக்கு இன்று ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. போட்டி முடிந்த பிறகு பேசிய சிஎஸ்கே அணி கேப்டன் தோனி, இந்தப் போட்டியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இது போன்ற தொடர்களில் விளையாடும் போது உங்களுக்கு வெற்றி என்பது மிகவும் முக்கியம்.

துரதிர்ஷ்டவசமாக ஆரம்பகட்ட போட்டிகளில் எங்களால் சரியாக விளையாட முடியவில்லை. அதுக்கு என்ன காரணங்கள் என்று பார்த்தால் நிறைய விஷயங்களை சொல்லலாம். இன்னும் தற்போது வெற்றியை பெற்றிருப்பது ஒட்டுமொத்த அணிக்கும் நம்பிக்கையை தருகிறது.
இதன் மூலம் நாங்கள் எந்த விஷயங்களில் இன்னும் முன்னேற வேண்டும் என்று நினைக்கின்றோமோ, அதற்கு இந்த வெற்றி உதவியாக இருக்கும். கிரிக்கெட்டில் நாம் நினைத்தது போல் நடக்கவில்லை என்றால் கடவுள் நமக்கு அனைத்தையும் கடினமாக மாற்றிவிடுவார். இன்றைய ஆட்டம் கூட எங்களுக்கு கடினமாக தான் இருந்தது.
நாங்கள் இந்த தொடரில் பவர் பிளேவில் மோசமாக விளையாடினோம். பந்துவீச்சிலும் சரி பேட்டிகளும் சரி, நாங்கள் நினைத்த தொடக்கத்தை எங்களால் பெற முடியவில்லை. சில நேரங்களில் தவறான கட்டத்தில் விக்கெட்டுகளை இழந்து விடுகின்றோம். இதெல்லாம் எங்கள் அணியின் தோல்விக்கு ஒரு காரணமாக இருந்தது.
இதேபோன்று சென்னை ஆடுகளமும் கொஞ்சம் தோய்வாக இருந்தது. நாங்கள் சொந்த மண்ணை விட்டு வெளியே விளையாடும்போது எங்கள் அணியின் பேட்டிங் நன்றாகவே செயல்படுகிறது. இது போன்ற பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் விளையாட வேண்டும் என்று நினைக்கின்றோம். இதன் மூலம் எங்களுடைய பேட்ஸ்மேன்களுக்கு பெரிய ஷாட் ஆடுவதற்கான நம்பிக்கை கிடைக்கும்.
இதேபோன்று அஸ்வின் மீது நாங்கள் அதிக நெருக்கடியை போடுகின்றோம் என்று நினைக்கின்றேன். முதல் ஆறு ஓவர்களில் அவர் இரண்டு ஓவர்கள் வீசுகிறார். எனவே இன்றைய ஆட்டத்தில் சில மாற்றங்களை செய்து பார்ப்போம் என்று எங்களுக்கு தோன்றியது. இது நல்ல பவுலிங் உடைய அட்டாக்காக இருக்கும் என்று நினைத்தேன். இதேபோன்று பேட்டிங்கிலும் நாங்கள் இன்னும் கொஞ்சம் முன்னேற்றத்தை பெறலாம்.
ஒவ்வொரு வீரர்களுக்கும் ஒரு பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அது குறித்து நாங்கள் ஒவ்வொரு போட்டியின் போதும் பேசி இருக்கின்றோம். ஒருமுறை நீங்கள் நல்ல தொடக்கத்தை கொடுத்து விட்டீர்கள் என்றால் நீங்கள் அந்த இன்னிங்ஸ் முழுவதும் விளையாட வேண்டும். ஷேக் ரசித் இன்று சிறப்பாக பேட்டிங் செய்தார் என்று நினைக்கின்றேன். அவர் சில ஆண்டுகளாக எங்கள் அணியில் இருந்தார்.
சேக் ரசித் வலை பயிற்சியின் போபது நன்றாக செயல்பட்டார். தற்போது அவருக்கு நல்ல தொடக்கம் கிடைத்து இருக்கின்றது. இயல்பான கிரிக்கெட் ஷாட்களை ஆடியே அவர் பவுலர்களை ஆதிக்கம் செலுத்த முடியும். தற்போது எனக்கு ஆட்டநாயகன் விருது கிடைத்திருக்கிறது. இதை சொன்னவுடன் எனக்கு ஏன் இந்த அவார்ட் தருகிறார்கள் என்று தான் யோசித்தேன். ஏனென்றால் நூர் முகமது அபாரமாக பந்துவீசினார் என்று தோனி பாராட்டினார்.