IPL 2025: அந்த தவறை லக்னோக்கு எதிராக தோனி செய்யவே இல்லை.. கவனிச்சீங்களா? காரணம் என்ன?
லக்னோ: ஐபிஎல் 2021 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி தழுவியதற்கு முக்கிய காரணம் பவர் பிளேவில் ஏதேனும் ஒரு ஓவரில் பவுலர்கள் 20 ரன்கள் விட்டுக் கொடுத்தது தான். குறிப்பாக சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருந்த ருதுராஜ், ஒரு ஃபார்முலாவை உருவாக்கிக் கொண்டு அதையே பின்பற்றினார்.
குறிப்பாக பவர் பிளேவில் அஸ்வினை தொடர்ந்து ஒரு ஓவர் வீச வைத்தார். இதை எதிரணி பேட்ஸ்மேன்கள் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு விளையாடினார்கள். சிஎஸ்கே அணியில் மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் உள்ள நிலையில் பவர் பிளேவில் ஒருவரை பயன்படுத்துவது என்பது சரியான முடிவு தான்.

ஆனால் பவர் பிளேவில் தொடர்ந்து எதிரணி பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்கிறார்கள் என்பதால் அந்த தவறை திரும்பச் செய்யக்கூடாது என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்திருந்தார்கள். ஆனால் ருதுராஜ் அந்த தவறை திரும்பத் திரும்ப செய்தார். இந்த சூழலில் தோனி கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியிலும் அதே தவறை செய்தார்.
இந்த நிலையில் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோனி பவர் பிளேவில் முழுவதும் வேகப்பந்துவீச்சாளர்களை பயன்படுத்தினார். அன்சூல் கம்போஜ், கலில் அஹமத் என இருவரையும் தோனி பவர் பிளேவில் தலா மூன்று ஓவர்களை வீச வைத்தார். இது சிஎஸ்கேவுக்கு நல்ல பலனையும் கொடுத்தது. முதல் ஓவரில் கலீல் அகமத் 6 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
இரண்டாவது ஓவரில் அன்சூல் கம்போஜ் வெறும் 1 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்தார். மூன்றாவது ஓவரில் கலீல் அகமத் ஐந்து ரன்களையும், நான்காவது ஓவரில் அன்சூல் கம்போஜ் 11 ரன்களையும் விட்டுக் கொடுத்தார். ஐந்தாவது ஓவரில் மீண்டும் கலில் அகமத் 11 ரன்களை விட்டுக் கொடுக்க ஆறாவது ஓவரில் அன்சூல் கம்போஜ் எட்டு ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார்.
இதன் மூலம் லக்னோ அணி பவர்பிளே முடிவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 42 ரன்கள் மட்டுமே எடுத்தது. களத்தில் நிக்கோலஸ் பூரான் இருந்ததால் அவர் சுழற் பந்துவீச்சாளர்களை அபாரமாக எதிர்கொள்வார் என்பதை தோனி அறிவார். இதனால் அதற்கு வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்பதற்காகவே தோனி வேக பந்துவீச்சாளர்களை முற்றிலும் பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications