சென்னை: ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியே தங்களது முக்கிய எதிரி என்பதை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சூசகமாக கூறி இருக்கிறார்.
2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாடியது. இந்த இரண்டு அணிகளும் ஐபிஎல் தொடரில் தலா ஐந்து முறை கோப்பையை வென்றுள்ளன. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையில் நீண்ட காலமாகவே போட்டி நிலவி வருகிறது.

ஆனால், சமீப காலமாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கும் அதே போன்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்து வெள்ளிக்கிழமை அன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக விளையாட உள்ளது.
அந்தப் போட்டிக்கு முன்னதாக சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் ஜியோ ஹாட்ஸ்டாரில் பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது: "ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக விளையாடுவதை ஆர்வத்துடன் எதிர்நோக்கி இருக்கிறேன். குறிப்பாக ரஜத் படிதார் அந்த அணியின் புதிய கேப்டனான பிறகு, அந்த அணியுடன் விளையாட விரும்புகிறேன்."
"ரஜத் கேப்டனாக அறிவிக்கப்பட்டவுடன் அவருக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பினேன். நாங்கள் நீண்ட காலமாக நண்பர்கள், ஒருவரை ஒருவர் எங்களுக்கு நன்கு தெரியும். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பலமான அணிகளில் ஒன்று. அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாகவே ஆடி இருக்கிறார்கள்."
"விராட் கோலி எப்போதெல்லாம் எதிரணியில் இருக்கிறாரோ, அவர் எப்போதெல்லாம் எங்களுக்கு எதிராக விளையாடுகிறாரோ அந்தப் போட்டியை நாங்கள் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறோம். அவர் நீண்ட காலமாக விளையாடி வருகிறார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காகவும், இந்திய அணிக்காகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். இது எப்போதுமே சிறந்த போட்டியாக இருக்கும்."
"மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அடுத்ததாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக விளையாடுவதை நாங்கள் அதிகம் எதிர்பார்த்து இருக்கிறோம்" என்று கூறியிருக்கிறார் ருதுராஜ் கெய்க்வாட்.
இதன் மூலம், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அடுத்து ஆர்சிபி தான் சிஎஸ்கே அணியின் முக்கிய எதிரி என்பதை அவர் சூசகமாக உணர்த்தி இருக்கிறார். ஏற்கனவே, சமூக வலைதளங்களில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளின் ரசிகர்கள் தீவிரமாக மோதிக் கொள்ளும் நிலையில், ருதுராஜின் இந்தப் பேச்சு அந்த மோதலை அதிகரிக்கும் வகையில் உள்ளது.
செய்தி சுருக்கம்: