சென்னை: தோனி மீண்டும் ஐபிஎல் தொடரில் ஆட இருப்பது பற்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் வெளிப்படையாக பேசி இருக்கிறார். 2025 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவது உறுதி என அவர் கூறி இருக்கிறார்.
தோனி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில். "எனது கடைசி சில ஆண்டுகள் கிரிக்கெட்டை நான் மகிழ்ச்சியாக விளையாட நினைக்கிறேன்." என்று சொல்லி இருந்தார். அதன் மூலம் தோனி இன்னும் சில ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் விளையாட விரும்புவது தெளிவாகி இருக்கிறது.

அது பற்றி பேசிய காசி விஸ்வநாதன், "தோனி விளையாட தயாராக இருக்கிறார். இதைவிட எங்களுக்கு வேறு என்ன வேண்டும். நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். அவர் அந்த நிகழ்ச்சியில் என்ன பேசினார்? என்பதை நாம் அனைவரும் பார்த்தோம். அவர் இன்னும் சில ஆண்டுகள் விளையாட விரும்பினால் அதை விட எங்களுக்கு என்ன வேண்டும்? தோனி ராஞ்சிக்கு திரும்பிய பின் அக்டோபர் 28 அல்லது 29 அன்று நாங்கள் அவருடன் பேச இருக்கிறோம்." என்றார்.
மேலும், "தோனி எப்போதும் சிஎஸ்கே அணி மீது அக்கறை கொண்டு இருக்கிறார். உரிமையாளர் ஸ்ரீனிவாசன் மீது அதிக மதிப்பு வைத்து இருக்கிறார். தோனிக்கு நாங்கள் எப்போதும் அழுத்தம் அளித்ததில்லை. அவர் என்ன முடிவு எடுக்கிறாரோ அதை நாங்கள் ஏற்றுக் கொள்வோம்." என்றார். இதன் மூலம் சிஎஸ்கே அணி தோனியை தக்க வைப்பது உறுதியாக இருக்கிறது.
எனினும், 2025 ஐபிஎல் தொடரில் தோனி இம்பேக்ட் வீரராக மட்டுமே விளையாடுவார் என கூறப்படுகிறது. அது பற்றி காசி விஸ்வநாதன் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. மேலும், தோனியை 4 கோடி ரூபாய் சம்பளத்துக்கு உள்ளூர் வீரருக்கான அன்கேப்டு (Uncapped) பிரிவில் தோனியை சிஎஸ்கே அணி தக்க வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதுபற்றி தோனியை சந்தித்த பின் சிஎஸ்கே அணி முடிவு எடுக்கும் என கூறப்படுகிறது.
சிஎஸ்கே அணியில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, மதீஷா பதிரானா ஆகிய மூன்று வீரர்களோடு நான்காவதாக தோனியும் தக்க வைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.