சென்னை: 2025 ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன்னதாக தோனியை சிஎஸ்கே அணியில் மிகக் குறைந்த சம்பளத்தில் தக்க வைத்துக் கொள்ளும் வகையில் ஐபிஎல்-இல் விதிமாற்றம் ஒன்று செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. சிஎஸ்கே நிர்வாகம் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் தான் பிசிசிஐ இந்த விதி மாற்றத்தை அறிவிக்க உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் அதை மறுத்து இருக்கிறார்.
2025 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக மெகா ஏலம் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக அனைத்து வீரர்களையும் ஒவ்வொரு ஐபில் அணியும் விடுவிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. நான்கு அல்லது ஐந்து வீரர்களை மட்டுமே ஒரு அணியால் தக்கவைத்துக் கொள்ள முடியும். அவர்களுக்கு முன்பு வழங்கியதை விட கூடுதல் சம்பளம் வழங்க வேண்டிய கட்டாயமும் ஏற்படும். பிசிசிஐ விரைவில் அது தொடர்பான விதிமுறைகளை வெளியிட உள்ளது.

இந்த நிலையில் சிஎஸ்கே அணியில் தோனியை தக்கவைக்க வேண்டும் என்றால் அவருக்கு அதிக சம்பளம் அளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அவர் இனி இம்பாக்ட் வீரராகவோ அல்லது சில போட்டிகளில் மட்டுமோ தான் பங்கேற்பார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் 2021 ஐபிஎல் தொடர் வரை அமலில் இருந்த விதி ஒன்றை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என சிஎஸ்கே கோரிக்கை வைத்ததாக தகவல்கள் வெளியாகின.
ஐந்து ஆண்டுகளாக சர்வதேச போட்டிகளில் விளையாடாத வீரர்களை உள்ளூர் வீரர்கள் என கருதும் நடைமுறை முன்பு இருந்தது. அதன் மூலம் சர்வதேச அனுபவ வீரர்களையும் உள்ளூர் வீரர்களுக்கான குறைவான சம்பளத்தில் தக்க வைத்துக் கொள்ளக்கூடிய சூழ்நிலை இருந்தது. இந்த விதி ஓய்வு பெற்ற வீரர்களுக்கு பலன் அளிக்கும் எனக் கருதி பிசிசிஐ உருவாக்கி இருந்தது. பின்னர் அந்த விதி நீக்கப்பட்டது.
தற்போது பிசிசிஐ அந்த விதியை மீண்டும் அமல்படுத்த உள்ளது. இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறுகையில், "எனக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது. நாங்கள் அந்த கோரிக்கையை வைக்கவில்லை. பிசிசிஐ அவர்களாகவே முன்வந்து உள்ளூர் வீரர்களுக்கான விதியை நாங்கள் மீண்டும் நடைமுறைப்படுத்தலாம் என இருக்கிறோம் என்றார்கள். அவர்கள் இன்னும் அது குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. விதிமுறைகள் குறித்த அறிவிப்பை பிசிசிஐ தான் வெளியிட வேண்டும்." என்றார் காசி விஸ்வநாதன்.