புதுச்சேரி: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக களம் இறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டார். இதனை அடுத்து சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி செயல்படுகிறார்.
தோனி கேப்டனாக பொறுப்பேற்று சிஎஸ்கே அணி மூன்று போட்டிகளில் நடப்பு சீசனில் விளையாடி இருக்கிறது. இதில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது. இந்த நிலையில் எஞ்சிய ஆறு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் செல்ல முடியும் என்ற இக்கட்டான நிலையில் சிஎஸ்கே அணி இருக்கிறது.

காயமடைந்துள்ள ருதுராஜ், சிஎஸ்கே அணியுடன் தொடர்ந்து பயணிக்கின்றார். மேலும் சிஎஸ்கே பயிற்சி முகாமில் ருதுராஜ் பயிற்சி செய்கிறார். இதனால் ருதுராஜ் இந்த தொடரில் ஏதேனும் ஒரு போட்டிகளில் மீண்டும் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள சிஎஸ்கே அணியின் தலைமைச் செயல அதிகாரியான காசி விஸ்வநாதன், ருத்ராஜ் நடப்பு சீசனில் காயம் அடைந்தது துரதிர்ஷ்டவசமானது.
அவரால் இனி நடப்பாண்டில் எந்த ஒரு ஐபிஎல் போட்டியிலும் பங்கேற்க முடியாது என்ற நிலையே தொடர்கிறது. ஆனால் ருதுராஜ் எங்கள் அணியின் மிகவும் முக்கியமான வீரர். எங்கள் அணியின் கேப்டனாகவும் இருக்கின்றார். அவருடைய வழிகாட்டுதல் சிஎஸ்கே அணிக்கு தேவை. சிஎஸ்கே அணியில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அவரும் அறிவுரைகளை வழங்குவதற்காக அணியுடன் தொடர்ந்து பயணிக்கின்றார்.
இன்னும் 6 போட்டிகள் இருக்கிறது. வெற்றி பாதைக்கு திரும்ப நாங்கள் முயற்சி செய்கின்றோம். ஒவ்வொரு போட்டியிலும் முன்னேற்றம் அடைய வீரர்கள் கடுமையாக உழைத்து வருகிறார்கள். விளையாட்டு என்று வந்தால் வெற்றியும் தோல்வியும் கண்டிப்பாக இருக்கும். வெற்றி பெறும் போது பாராட்டுவதும் தோல்வி அடையும்போது சரியாக விளையாடவில்லை என்று ரசிகர்கள் சொல்கிறார்கள்.
ஆனால் சிஎஸ்கே அணி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. 2010 ஆம் ஆண்டு கூட இதே போல் தான் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து பின் வெற்றி பெற்றோம். இதனால் அடுத்தடுத்து போட்டியில் சிஎஸ்கே நன்றாக விளையாடும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று காசி விஸ்வநாதன் கூறியுள்ளார்.