மும்பை : ஐபிஎல் தொடரில் அபாரமாக செயல்பட்டு இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய பவுலராக மாறி இருப்பதில் முகமது சிராஜும் ஒருவர். ஐபிஎல் 2017 ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் அணிக்காக அறிமுகமான சிராஜ் 6 போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஆனால் அதன் பிறகு 2018 ஐ பி எல் சீசனில் இருந்து தொடர்ந்து ஏழு ஆண்டுகள் சிராஜ் ஆர்சிபி அணிக்காக விளையாடி இருக்கிறார். ஆர்சிபி அணிக்காக 87 போட்டிகளில் விளையாடி 83 விக்கெட்டுகளை முகமது சிராஜ் கைப்பற்றி இருக்கிறார்.

விராட் கோலியின் முக்கிய படைத் தளபதிகளில் ஒருவராக சிராஜ் ஆர்சிபி அணிக்கு திகழ்ந்தார். இந்த நிலையில் ஆர்சிபி அணி சிராஜை தக்க வைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். இதன் மூலம் சிராஜ் புதிய அணிக்கு செல்வரா இல்லை ஆர் டி எம் மூலம் ஆர் சி பி அணியை மீண்டும் எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏற்கனவே இந்திய வேகப்பந்துவீச்சாளர்களுக்கு மவுசு அதிகமாக இருக்கும் நிலையில் சிராஜை ஆர்சிபி அணி விட்டது தவறாக பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அனுபவம் வாய்ந்த இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லாதது மிகப்பெரிய குறையாக பார்க்கப்படுகிறது. இதனால் சிராஜை குறி வைத்து சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுக்கும் என தெரிகிறது.
இது தொடர்பாக சிஎஸ்கே அணி ஒரு டிவிட் போட்டிருப்பது தான் தற்போது கவனத்தை ஈர்த்திருக்கிறது. ஐபிஎல் மெகா ஏலம், சவுதி அரேபியாவில் நடக்கும் என பிசிசிஐ அறிவித்துள்ள நிலையில், சிஎஸ்கே அணி போட்டிருக்கும் டிவீட்டில் சவுதிக்கு செல்ல நாங்கள் தயாராக இருக்கின்றோம். அங்கு Siuuu ஸ்டைலை கொண்டாடும் வீரரை பார்க்க வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறோம் என குறிப்பிட்டு இருக்கிறது.
Siuuu ஸ்டைலை கொண்டாடுவது கால்பந்து வீரர் ரொனால்டோ தான் என்று உலகத்திற்கு தெரியும்.ஆனால் இதே ஸ்டைலைதான் முஹமது சிராஜ் கிரிக்கெட்டில் காப்பியடித்து வருகிறார். இதனால் சிஎஸ்கே அணி முகமது சிராஜை குறிப்பிட்டு தான் இந்த டிவிட்டை போட்டு இருப்பதாகவும், இதனால் சிராஜ் சிஎஸ்கே அணிக்கு வர வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சிராஜிக்கு 30 வயது ஆகிவிட்டதால் ஆர் சி பி அணி புதிய வேக பந்துவீச்சாளர்களை தேர்வு செய்ய ஆயத்தம் ஆகி வருவதால் தான் அவரை விடுவித்து இருப்பதாக குறிப்பிட்டுள்ள கிரிக்கெட் வல்லுனர்கள், இதனை சிஎஸ்கே அணி சரியாக பயன்படுத்திக் கொள்ளப் போவதாக கருத்து தெரிவித்துள்ளனர். ஐபிஎல் மெகா ஏலம் வரும் 24 மற்றும் 25ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. இதில் ஆர்சிபி அணியிடம் 83 கோடி ரூபாயும், சிஎஸ்கே அணியிடம் 55 கோடி ரூபாயும் இருக்கின்றது. ஆர்சிபி அணியிடம் மூன்று ஆர் டி எம் கார்டு இருக்கின்றது. சிஎஸ்கே அணியிடம் ஒரு ஆர் டி எம் கார்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.