லக்னோ: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. இதனால் இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணி அதிரடி மாற்றங்களை நிகழ்த்திருக்கிறது.மற்ற அணிகள் எல்லாம் இளம் வீரர்கள் பட்டையை கிளப்பும் நிலையில் சிஎஸ்கே அணியில் மட்டும் பெரிய அளவு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதன் காரணமாக சிஎஸ்கே அணி இன்று அஸ்வினை நீக்கிவிட்டு ஜெமி ஓவர்டனையும் தொடக்க வீரர் கான்வேவையும் நீக்கிவிட்டு இளம் வீரர் ஷேக் ரசித்ததையும் பிளேயிங் லெவனில் சேர்த்தது. சேக் ரசித் 2023 ஆம் ஆண்டிலிருந்து சிஎஸ்கே அணியில் உள்ள நிலையில் தற்போது தான் முதல் போட்டியில் அவர் விளையாடுகிறார்.

சிஎஸ்கே அணி நடப்பு சீசனில் தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம் பவர் பிளேவில் சிறப்பாக விளையாடாதது தான். பவர் பிளேவில் மற்ற அணிகள் எல்லாம் எக்ஸ்பிரஸ் வேகத்தில் செல்லும் நிலையில், சிஎஸ்கே அணி மட்டும் டவுன் பஸ் வேகத்தை விட மோசமாக ரன்களை சேர்த்தது. இந்த நிலையில் இன்று ஷேக் ரசித், ரச்சின் ரவீந்திரா அபரமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.
இந்த புதிய ஜோடி சிஎஸ்கே ரசிகர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக விளையாடியது. குறிப்பாக இளம் வீரர் ஷேக் ரஷீத் லக்னோ வீரர்களின் பந்துவீச்சை பவுண்டரியாக சிதறடித்தார். கொஞ்சம் கூட பதற்றமே இல்லாமல் ஷேக் ரசித் ஆடிய விதம் ரசிகர்களின் இதயத்தை வென்றது. 19 பந்துகளை எதிர்கொண்ட ஷேக் ரசித் ஆறு பவுண்டரிகள் அடித்து 27 ரன்கள் சேர்த்தார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 142 ஆகும்.
எனினும் ஆவேஸ் கான் வீசிய பந்தை தவறான ஷாட் செலக்ஷன் காரணமாக ஆடி ஆட்டமிழந்தார். சேக் ரசித் அதிரடி ஆட்டம் காரணமாக சிஎஸ்கே அணி நான்கு புள்ளி இரண்டு ஓவர்களில் எல்லாம் 50 ரன்களை விக்கெட் இழப்பின்றி எட்டியது. எனினும் ஷேக் ரசித் 27 ரன்களில் ஆட்டம் இழந்தார். முதல் போட்டியிலேயே ஷேக் ரசித்து ரசிகர்களின் நம்பிக்கையை பெற்றிருப்பதால் ,அவரை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.