சென்னை: ஐபிஎல் மெகா ஏலம் நெருங்கும் நிலையில், சிஎஸ்கே அணி தரப்பில் 5 வீரர்களை மொத்தமாக தக்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மெகா ஏலத்தில் சில வீரர்களை ரிலீஸ் செய்து ரிஸ்க் எடுக்கவும் சிஎஸ்கே அணி நிர்வாகம் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.
ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன் தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை சமர்ப்பிக்க இன்னும் 4 நாட்களே இருக்கிறது. இதனால் பல்வேறு அணிகளும் தங்களின் வீரர்களுடன் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் சிஎஸ்கே அணி நிர்வாகமும் சில ஆலோசனைகளை செய்து முடித்துள்ளது. அதேபோல் தோனியும் அடுத்த சீசனில் விளையாட முடிவு செய்துள்ளதாக மறைமுகமாக சிக்னல் கொடுத்துள்ளார்.

இன்னும் 2 நாட்களில் கோவாவில் இருந்து தோனி ராஞ்சிக்கு வரவுள்ளார். அதன்பின் சிஎஸ்கே அணி நிர்வாகிகள் அவருடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். அப்போது தோனிக்கு எந்த ஒப்பந்தம் தேவை என்பது குறித்த ஆலோசனை செய்யப்படும் என்று பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் குறைந்த தொகையான ரூ.4 கோடிக்கு அன்-கேப்ட் வீரராக தோனியை ஒப்பந்தம் செய்ய சிஎஸ்கே அணி நிர்வாகம் விரும்பும்.
அதற்காக தான் சிஎஸ்கே அணி நிர்வாகம் அன்-கேப்ட் வீரருக்கான விதிமுறையை மாற்றக் கோரியது. இதனைத் தொடர்ந்து சிஎஸ்கே அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான ரவீந்திர ஜடேஜாவுக்கு ரூ.18 கோடி ஒப்பந்தம் கொடுக்கவும், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்-க்கு ரூ.18 கோடி ஒப்பந்தம் கொடுக்கவும் சிஎஸ்கே அணி நிர்வாகம் ஆலோசித்திருக்கிறது.
அதேபோல் இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளரான மதீஷா பதிரானாவுக்கு ரூ.14 கோடி ஒப்பந்தம் அளிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது. சில வாரங்களுக்கு முன் பதிரானாவின் மேலாளர் சென்னை வந்திருந்தார். அப்போது இன்னும் சில நாட்களில் நல்ல செய்தி வெளியாகும் என்று எக்ஸ் தளத்தில் மஞ்சள் நிறத்திலான இதயம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
இதனால் பதிரானா தக்க வைக்கப்படுவது நிச்சயம் என்று பார்க்கப்படுகிறது. அவருக்கு ஆர்டிஎம் கார்டு பயன்படுத்தலாம் என்றாலும், சிஎஸ்கே அணி நிர்வாகம் எந்த ரிஸ்கையும் எடுக்க விரும்பவில்லை. ஏனென்றால் ஆர்டிஎம் கார்டு காட்டப்பட்ட பின்னரும், ஏலத்தில் விலையை மாற்ற ஒரு முறை வாய்ப்பு அளிக்கப்படும். இதனால் பதிரானா போன்ற வீரருக்கு வேண்டுமென்றே சில அணிகள் ஏலத்தில் விலையை ஏற்றிவிடுவார்கள்.
அதேபோல் சிவம் துபே விவகாரத்தில் சிஎஸ்கே அணி நிர்வாகம் ரிஸ்க் எடுக்க வாய்ப்பில்லை என்று பார்க்கப்படுகிறது. ஏனென்றால் நம்பர் 4ல் களமிறங்கி ஸ்பின்னர்களையும் பொளக்க கூடிய பேட்ஸ்மேனான சிவம் துபே, கடந்த 3 சீசன்களாக மிகப்பெரிய வீரராக வளர்ந்துள்ளார். இந்திய அணியிலும் தொடர்ந்து விளையாடி வரும் அவருக்கு ரூ.11 கோடி ஒப்பந்தம் கொடுப்பதில் சிஎஸ்கே அணி தயக்கம் காட்டாது.
இதனால் ஒரேயொரு ஆர்டிஎம் கார்டுடன் மெகா ஏலத்தில் பங்கேற்கும் திட்டத்திற்கு சிஎஸ்கே அணி வந்துள்ளது. அதனை ரச்சின் ரவீந்திரா, கான்வே அல்லது ரிஸ்வி உள்ளிட்ட 3 வீரர்களில் ஒருவரை வாங்க வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் 2 நியூசிலாந்து வீரர்களும் சிஎஸ்கே அணிக்காக சிறப்பாக பங்காற்றி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.